கும்பராசிக்கு இதுவரை ஏழாமிடத்தில் இருந்த குருபகவான் தற்போது மாற்றங்களைத் தரும் எட்டாமிடத்திற்கு மாறி அஷ்டமகுரு எனும் நிலை பெறுகிறார்.
அஷ்டமகுரு என்றவுடன் யாருக்கும் ஒருவிதமான கலக்கம் ஏற்படுவது இயற்கைதான். ஆனால் சுபக்கிரகங்கள் மறைவுஸ்தானத்தில் வரும்போது எதிர்காலத்திற்கான நன்மைகளையே
செய்யும் என்பதையும் பாவக்கிரகங்களைப் போல சுபர்கள் கடுமையான கெடுபலன்களை எப்போதுமே செய்வதில்லை என்பதையும் புரிந்து கொண்டால் இங்கே கலக்கத்திற்கு இடமில்லை.
அஷ்டமச்சனி செய்யும் கெடுதல்களுக்கும் அஷ்டமகுருவால் வரும் விளைவுகளுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கின்றன. மேலும் ஒரு கிரகம் அந்த ராசிக்கு யோகராக
இருக்கும் நிலையில் மறைவு பெற்றால் மட்டுமே கெடுபலன் தரும். ஒரு ராசிக்கு பாவராக இருக்கும் கிரகம் வலு இழந்தால் தீமையில்லை எனும் விதிப்படி கும்பராசிக்கு
குருபகவான் எட்டில் மறைவது ஒரு வகையில் நன்மையைத்தான் தரும்.
எட்டில் மறையும் குருவால் எதிர்கால மாற்றங்கள் தற்போது உங்களுக்கு நடைபெறும். குறிப்பாக இளைய பருவத்தினருக்கு நீங்கள் எந்த விதத்தில் வாழ்க்கையில் நிலை பெற
இருக்கிறீர்களோ அந்த இடத்தை நோக்கி உங்களை நகர்த்தும் வேலையை குருபகவான் செய்வார்.
மேலும் இது போன்று எட்டாமிடத்திற்குக் கிரகங்கள் வரும் போது உங்களில் ஒரு சிலர் இப்போது இருப்பதை விட எதிர்காலத்தில் நன்றாக இருக்க வேண்டியவர்கள் என்பதை உணராமல்
சோம்பலுடன் தற்போது இருக்கும் சுமாரான நிலையே போதும் என்று ஒரே இடத்தில் உழன்று கொண்டிருக்கும் நிலையில் உங்களின் நன்மைக்காக இருக்கும் வேலையை விட்டு அந்த
இடத்தை விட்டு உங்களை எட்டாமிட கிரகம் பிடரியில் உதைத்து வெளியே தள்ளும்.
அப்போதைக்கு அந்த வெளியேற்றம் உங்களுக்கு கெடுதலாக தோன்றினாலும் வாழ்க்கையே முடிந்து விட்டதாகத் தெரிந்தாலும் அதன் பிறகு ஏற்படும் வாய்ப்புகளினால் முன்பை விட
நீங்கள் நன்றாக இருக்கும் போது எதற்காக இந்த வெளியேற்றுதல் நடந்தது என்பது உங்களுக்குப் புரிய வரும். இதுவே எட்டாமிட சுபக்கிரகங்களின் விளையாட்டு.
எனவே இந்த அஷ்டமகுரு அமைப்பு கும்பராசிக்கு எதிர்காலத்தில் நீங்கள் நன்றாக இருக்கவேண்டியதற்கான மாற்றங்களை தற்போது தரும். அது சில காலம் கசப்பாக இருந்தாலும்
எதிர்காலம் இனிக்கும் என்பதால் மாற்றங்களை எதிர்கொள்ள கும்பத்தினர் தயாராகுங்கள்.
குருபகவானின் பார்வை பனிரெண்டு, இரண்டு, நான்கு ஆகிய ஸ்தானங்களில் விழுந்து அவை வலுப்பெறுவதால் பனிரெண்டாமிடத்தின் சுபகாரகத்துவமான வெளிமாநிலம், வெளிதேசம்
போன்றவற்றில் பிழைக்கும் வாய்ப்பு சிலருக்கு இப்போது ஏற்பட்டு உள்நாட்டில் இருக்கும் வேலையை விட அதிக சம்பளத்தில் சிலர் வெளிநாடு செல்வீர்கள்.
குறிப்பிட்ட சிலருக்கு வெளிநாட்டுக் கம்பெனிகளில் தலைமைப் பொறுப்பு கிடைப்பதும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் அமைவதும், வெளிதேச நட்பு மூலம் தொழில் லாபங்கள்
இருப்பதும் வடக்கு நோக்கிச் செல்வதும் இந்த குருப்பெயர்ச்சியால் நடக்கும்.
குருபகவான் தனம், வாக்கு, குடும்பஸ்தானம் எனும் இரண்டாமிடத்தை வலுப்பெற்றுப் பார்ப்பதால் இந்தக் குருப்பெயர்ச்சியினால் உங்களுக்கு பணவரவில் தடைகளோ, பொருளாதார
கஷ்டங்களோ இருக்காது. வருமானம் சீராக இருக்கும் என்பதால் எவ்வித கஷ்டங்களும் உங்களுக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை.
அதேபோல வாக்குஸ்தானம் வலுப்பெறுவதால் ஒருவருக்கு கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். குடும்பத்தில் சந்தோஷம், மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்திற்கு
தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் வாங்க முடியும். சிலருக்கு குடும்பம் அமைந்து குடும்பஸ்தன் ஆவீர்கள்.
அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும், பேச்சினால் தொழில் செய்ய கூடிய ஆசிரியர்கள் வக்கீல்கள் போன்றவர்களுக்கும் வீடுமாற்றம், அலுவலக இட மாற்றம்,
ஊர்மாற்றம் போன்றவைகள் நடக்கக் கூடிய கால கட்டம் இது.
அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையாக
இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் தற்போது கிடைக்கும்.
அரசு ஊழியர்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சியால் நன்மைகள் உண்டு. குறிப்பாக அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள்,
நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் மிகவும் நல்ல பலன்கள் நடக்கும்.
பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும் காலகட்டமாக இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு அதிகாரப்பதவிகள் தேடி வரும். பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்வீர்கள்.
தனியார் துறையினர் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். திடீரென நிர்வாகம் கண்காணிப்பு
வேலைகளில் ஈடுபடவோ, அது சம்பந்தப்பட்ட கருவிகளைப் பொருத்தவோ, ஆட்களை நியமிக்கவோ வாய்ப்பு உள்ளது.
சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான
காலம்தான். சுயதொழிலர்களுக்கு உற்பத்தி ஆர்டர்கள் சீராகக் கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். பணவரவு தடைப்படாது.
தொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், காவல் துறையினர், நீதித்துறையினர், வாகனங்களை இயக்குபவர்கள், அன்றாடம்
சம்பளம் வாங்குபவர்கள், தொழில் அதிபர்கள், வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக்கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த
குருப்பெயர்ச்சி நல்ல பலன்களையே தரும்.
பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகவும் நல்ல பலன்களைக் கொடுக்கும். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள். வேலை செய்யும் இடங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது.
வீட்டிலும் உங்கள் பேச்சை கணவரும் பிள்ளைகளும் கேட்பார்கள். குடும்பத்தில் சுபகாரியங்களை மிகச் சிறப்பாக நடத்துவீர்கள். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு
பணியிடங்களில் மகிழ்ச்சியும் மரியாதையும் நிச்சயம் உண்டு.
குடும்பத்தில் யாராவது ஒருவர் கோபத்தில் பேசினாலும் மற்றவர் அடங்கிப் போவதால் எல்லாவித பிரச்னைகளையும் சமாளிக்க முடியும். மேலும் அறிவுப் பூர்வமாக சிந்திக்கக்
கூடிய பெண் ஒருவர் இருக்கும் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் பெரிதாக வராது.
புனிதயாத்திரை செல்வீர்கள். ஞானிகள் மகான்களின் திருப்பாதம் பதிந்த இடங்களுக்கு சென்று தரிசித்து உங்களை புனிதப்படுத்திக் கொள்வீர்கள். குறுப்பிட்ட சிலருக்கு
காசி கயா ரிஷிகேஷ் போன்ற வடமாநில தீர்த்த யாத்திரைகளும் ஆன்மிக சுற்றுலாக்களும் உண்டாகும். தெய்வ தரிசனங்களும் கிடைக்கும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு
அதிகமாகும். மகான்களின் கருணைப் பார்வை உங்கள் மீது விழும்.
நீண்ட நாட்களாக குலதெய்வ வழிபாடு நடத்தாதவர்கள் உடனடியாக அந்தக் குறையைத் தீர்க்கும் வண்ணம் குலதெய்வத்தை தரிசனம் செய்யுங்கள். எத்தனை இஷ்ட தெய்வத்தை
வழிபட்டாலும் குலதெய்வத்திற்கு மிஞ்சிய சக்தி இல்லை என்பது சித்தர்களின் வாக்கு.
குருபகவான் முயற்சி ஸ்தானம் எனப்படும் மூன்றுக்குடையவராகி எட்டில் மறைவதால் எந்த ஒரு விஷயமும் நீண்ட முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும் என்பதால் கடினஉழைப்பும்
விடாமுயற்சியும் கண்டிப்பாகத் தேவைப்படும். சில நேரங்களில் தோல்வி மனப்பான்மையும் விரக்தியும் ஏற்படலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு நான்கு
முறை யோசித்து செயல்படுவது நல்லது.
பரிகாரங்கள்:
ஏழில் ராகு எட்டில் குரு என்ற அமைப்பு இருப்பதால்
வேலூர் வாலாஜாபேட்டை
ஸ்ரீ தன்வந்திரிபீடத்தில் கயிலை ஞானகுரு ஸ்ரீலஸ்ரீ முரளிதர சுவாமிகளால் ஒரே கல்லில் ஸ்தாபிக்கப்பட்ட ராகுகேதுக்களை வணங்கி முறையான பரிகாரங்களைச்
செய்யுங்கள். மேலும் அன்னை மீனாட்சியின் தவப்புதல்வர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகளின் அருள் பொழியும் திருமுகத்தை தரிசியுங்கள். அனைத்து
பிரச்னைகளும் பஞ்சாய் பறந்து போகும்.
super ayya
ReplyDelete