ரிஷபம்:
ரிஷபராசிக்காரர்களுக்கு தற்போது பிறக்க இருக்கும் துன்முகி ஆண்டு துன்பங்கள் எதையும் தராமல் இன்பங்களை மட்டுமே தருகின்ற ஆண்டாக இருக்கும்.
கடந்த இரண்டு வருடங்களாகவே ரிஷபராசிக்காரர்களுக்கு கோட்சார ரீதியில் எந்த விதமான நல்லபலன்களும் கிடைக்காத நிலை இருந்து வந்தது. தற்போது தமிழ்ப் புத்தாண்டிற்கு
பிறகு நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி மிகவும் நல்ல அமைப்பாக குரு ஐந்தாமிடத்தில் வரப்போவதால் புதிதாக பிறக்க இருக்கும் தமிழ்புத்தாண்டு ரிஷபராசிக்கு மேன்மையான
பலன்களை செய்யும்.
இந்தத் தமிழ்ப்புத்தாண்டு முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும்.
இதுவரை வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.
பெரும்பாலான ராஜகிரகங்கள் என்று சொல்லப்படும் முக்கியமான கிரகங்கள் அனைத்தும் தற்போது ரிஷபராசிக்கு மிகவும் சாதகமான நிலையில் இருப்பதால் ரிஷபத்தினர் எந்த ஒரு
விஷயத்திலும் தயக்கத்தினை விட்டொழித்து முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வ விஷயங்களில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.
பிறந்த ஜாதகத்தில் யோகமான தசாபுக்திகள் நடந்து கொண்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு கண்ணா லட்டு தின்ன ஆசையா என்பது போல இரட்டிப்பு நல்ல பலன்கள் நடக்கும்.
குறிப்பிட்ட சிலர் ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழ் அடைவீர்கள். பொதுவாழ்வில் உள்ள அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும்.
கடந்த காலங்களில் பெரும்பாலான ரிஷபராசிக்காரர்கள் அனைத்து விஷயங்களிலும் மனக்கஷ்டங்களையும் தடைகளையும் சந்தித்தீர்கள். அப்படிப்பட்ட நிலை எதுவும் இப்போது
இருக்காது. எல்லா விஷயங்களும் நிதானமாக நல்லபடியாக நடக்கும்.
வீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும் காலம் இது. இதுவரை திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன்,
மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக்கவலை இப்போது நீங்கும்.
காதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் நீங்கள் நினைத்தவரை மணமுடிப்பீர்கள். முதல் வாழ்க்கை கோணலாகிப் போய் போலிஸ் கோர்ட் என்று திரிந்தவர்களுக்கு அனைத்துப்
பிரச்னைகளும் நல்லபடியாக முடிந்து இரண்டாவது வாழ்க்கை அமைப்பு நல்லபடியாக உருவாகும்.
இதுவரை புத்திரபாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு புத்திர காரகனாகிய குருபகவான் உச்சமடைவதால் குழந்தைச் செல்வத்தை வழங்குவார். தாத்தா பாட்டிகள்
உங்கள் வீட்டில் பேரக்குழந்தையின் மழலைச்சத்தத்தை கேட்கப் போகும் நேரம் வந்துவிட்டது.
இதுவரை நல்லவேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம்
பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் இதுவரை இல்லாத நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள்.
வாய்ப்புகள் வந்து வாசல்கதவைத் தட்டும்.
பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். உங்களைப் பிடிக்காத மேலதிகாரி
மாறுதலாகி உங்களுக்கு அனுசரணையானவர் அந்த இடத்திற்கு வருவார். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். ஏற்கனவே தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல்
சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடம் தொழில் நல்ல முன்னேற்றமாக நடக்கும்.
அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பளஉயர்வு, பதவி உயர்வு
போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், இயக்கும் வேலையில் உள்ளவர்கள் போன்ற துறையினர் தங்களது தொழிலை விரிவாக்கம் செய்வதற்கோ புதிய கிளைகள் ஆரம்பிப்பதற்கோ இது
மிகவும் நல்ல நேரம். கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும்,
பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.
தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில்
ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில் குதூகலம்
நிலவும். இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சகோதரர்கள் உதவுவார்கள்.
தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து
காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய சோதனை முயற்சிகளை இப்போது
செய்யலாம்.
குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது செய்ய
முடியும். இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய
சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.
மத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ. ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல
செய்திகள் கிடைக்கும். இதுவரை வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.
குறிப்பிட்ட சிலருக்கு நீண்ட நாட்களாக தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு சிறப்பாகச் செய்ய முடியும். நேர்த்திகடன்கள் செலுத்துவீர்கள். வெகு நாட்களாக திட்டம்
போட்டுக் கொண்டிருந்த வடமாநில புனித யாத்திரை இப்போது போக முடியும். ஞானிகள் அருள்புரியும் ஜீவசமாதிகளுக்கு சென்று அவர்களின் அருள் பெற முடியும்.
மொத்தத்தில் ரிஷபராசிக்கு சிறப்புகள் மட்டுமே உள்ள புத்தாண்டு இது
No comments :
Post a Comment