Monday, March 28, 2016

மீனம் : 2016 – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

மீனம்:

மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல அஷ்டமச்சனி முடிந்தாலும் பெரும்பாலான மீனராசிக்காரர்களுக்கு ராசியில் ராகு-கேதுக்கள் சம்பந்தப்பட்டு இருந்ததால் நன்மைகள் நடக்கவில்லை. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பதுபோல் கடந்த சிலமாதங்களாக ஆறாமிடத்து குருவாலும் மீனராசிக்காரர்கள் கடன், நோய், எதிரி தொல்லைகளை அனுபவித்து வந்தீர்கள்.

பிறக்க இருக்கும் தமிழ்ப்புத்தாண்டான துன்முகி ஆண்டில் மீனராசிக்காரர்களின் கோட்சார கிரகநிலைகள் பெரியஅளவில் நன்மைகளைத் தரும் நிலையில் இருப்பதால் துன்முகி ஆண்டு துன்பங்கள் எதுவும் தராத நன்மைகளை மட்டுமே தரும் ஆண்டாக இருக்கும்.

இளைய பருவத்தினருக்கு அவர்கள் படிப்புக்குத் தகுந்த நல்ல வேலை உடனடியாக கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை கிடைக்காத பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் இருந்த தொகையோடு சேர்த்து உடனடியாக கைக்கு வரும்.

சுயதொழில் செய்வர்கள் மிக சிறப்பான தொழில் வளர்ச்சியை காண்பார்கள். வியாபாரிகளுக்கு அற்புதமான காலகட்டம் இது. புதிய தொழில் ஆரம்பிக்கவோ கிளைகள் ஆரம்பிக்கவோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்யவோ ஏற்ற நேரம். எனவே, தயக்கத்தையும், யோசனைகளையும் உதறி தள்ளி சுறுசுறுப்பாக வேலைகளை கவனிக்க ஆரம்பித்தால் வெற்றி கொடி நாட்டலாம்.

தொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் தொழில் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும் பெருக்கித் தருவார்கள்.

இதுவரை மந்தமாக இருந்த வந்த கூட்டுத் தொழில் இனி சிறப்பாக நடைபெறும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மீனராசிக்காரர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும்.

பொது வாழ்க்கையில் இருக்கக் கூடியவர்களுக்கு இது மிகவும் மேன்மையை தர கூடிய காலமாக அமையும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். அரசு, தனியார் துறை பணியாளர்களுக்கு சம்பளத்தை தவிர்த்த மறைமுக வருமானம் இருக்கும். விவசாயிகளுக்கும் கலைத்துறையினருக்கும் இது மிகவும் அதிர்ஷ்டமான கால கட்டம் என்பதால் நீங்கள் ஏற்கனவே மனதில் நினைத்திருந்த முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்த அதிர்ஷ்டம் இனி கை கொடுக்கும்.

குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டு கொண்டிருந்த மங்கள காரியங்கள் இனிமேல் வெகு சிறப்பாக நடைபெறும். திருமணமாகாதவர்களுக்கு குருபலம் ஆகஸ்ட் மாதத்தில் வருவதால் இந்த வருடம் திருமணம் நடைபெறும். காதலித்துத் கொண்டு இருப்பவர்களுக்கு பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பிப்பீர்கள். குழந்தை பாக்கியம் தாமதித்தவர்களுக்கு தற்போது இந்த குருப்பெயர்ச்சிக்குப் பிறகு உடனடியாக நல்ல முறையில் குழந்தை பிறக்கும்.

இதுவரை கருத்து வேற்றுமைகளாலும், குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். குறிப்பிட்ட சிலருக்கு கணவன் மனைவி பிரச்னை விவாகரத்து வழக்கு வரை சென்று நிம்மதியை தொலைக்க வைத்தது. இனிமேல் மேற்படி விஷயங்களில் தீர்வுகள் வர ஆரம்பிக்கும். அந்த தீர்வுகள் உங்களுக்கு சாதகமாகவும் இருக்கும்.

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் உடனடியாக தீரும். கணவன் ஓரிடம் மனைவி வேறிடம் என்று பிரிந்து இருந்தவர்கள், வேலை விஷயமாக வெளியூரில் பிரிந்து வேலை பார்த்தவர்கள் உடனடியாக ஒன்று சேருவீர்கள். முதல் வாழ்க்கை கோணலாகிப் போய் இரண்டாவது திருமணத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு அந்த அமைப்பு இப்போது கூடி வரும். அது நன்றாகவும் நீடித்தும் இருக்கும்.

குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். சொத்துச் சேர்க்கை இருக்கும். பிள்ளைகளின் பெயர்களிலோ மனைவியின் பெயரிலோ ஏதேனும் சொத்து வாங்க முடியும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை வாங்கி சேமிக்கலாம்.

நண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இருக்கும். இதுவரை வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களுக்கு இருந்த தடை விலகி புதிய வீடு கட்டுவதோ மனைவாங்குவதோ இனிமேல் செய்ய முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும்.

இதுவரை தள்ளிப் போய் இருந்த வெளிநாடு தொடர்பான வேலை விஷயங்களும் வெளிநாட்டு பயணங்களும் தற்போது வெற்றிகரமாக கை கூடி வரும். வாழ்க்கைத் துணைவர் உறவு வழியில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும். பெற்றோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பங்காளிச் சண்டை தீரும். பூர்வீக சொத்து பிரச்னை சுமுகமாக ஒரு முடிவுக்கு வரும்.

வழக்கு கோர்ட் காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அவை அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும். இதுவரை உடல் நிலை சரி இல்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவார்கள். தொந்தரவு செய்து வந்த கடன்கள் கட்டுக்குள் இருக்கும். உங்களை பிடிக்காமல் பின்னால் பேசும் மறைமுக எதிரிகள் காணமல் போவர்கள்.

பெண்களுக்கு இது மிகச் சிறப்பான நன்மைகளைத் ஆண்டாகும். உங்களின் மதிப்பு உயரும். நான்கு பேர் கூடும் இடத்தில் தனித்துவமாக தெரிவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். அலுவலகத்தில் ஆண்கள் உங்களுக்கு அடங்கி இருப்பார்கள். இதுநாள் வரை இருந்து வந்த மேல் அதிகாரி தொந்தரவு இனி இருக்காது. புகுந்த வீட்டில் அந்தஸ்து, கௌரவம் கூடும். மாமியாரை நீங்கள் வேலை வாங்க முடியும்.

கமிஷன் தரகு போன்றவைகளின் மூலமாக நல்ல பெரிய தொகை ஒரே நேரத்தில் ‘லம்ப்’பாக கிடைக்கும். மூத்த சகோதரர்களிடம் நல்ல உறவும் நன்மைகளும் இருக்கும். சகோதர சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். பங்குச் சந்தை லாட்டரி போட்டி பந்தயங்கள் போன்றவைகள் இப்போது கை கொடுக்கும். வருகின்ற வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. வீட்டுமனை, நிலம் போன்றவைகள் இப்போது வாங்கிப் போடுவீர்கள். குழந்தைகளின் பேரில் டெபொசிட் செய்யலாம்.

உங்களுடைய மனதைரியம் கூடும். எதையும் சந்திக்கும் ஆற்றல் பெறுவீர்கள். நாளைக்குப் பார்க்கலாம் எனற ஒத்திப்போடுதல் இருக்காது. இதுவரை நீங்கள் பயந்து கொண்டிருந்த செயல்கள் விஷயங்களில் தலைகீழ் மாற்றங்கள் இருக்கும். அடுத்தவர்களின் உதவி உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் கிடைக்கும். ஒரு சிலர் வலிய வந்து உதவுவார்கள்.

மீனராசிக்காரர்களுக்கு இது திருப்புமுனையான ஆண்டு என்பதில் சந்தேகமில்லை,

No comments :

Post a Comment