Monday, March 28, 2016

கடகம் : 2016 -  தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

கடகம்:

கடகராசிக்காரர்களுக்கு வர இருக்கின்ற தமிழ்ப்புத்தாண்டான துன்முகி வருடம் துயரங்கள் எதையும் தரப்போவது இல்லை. அதே நேரத்தில் இந்தப் புத்தாண்டு பலன்களை இரண்டு பிரிவுகளாக கடகராசிக்கு சொல்லலாம்.

துன்முகி ஆண்டில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி கடகத்திற்கு சுமாரான பலன்களையே தரும் என்பதாலும் மற்ற வருட கிரகங்களின் அமைப்பும் சுமாராகவே உள்ளதாலும் புத்தாண்டின் முதல்பகுதி நற்பலன்களை கொண்டதாகவும், பின்பகுதி சுமாரான பலன்களை கொண்டதாகவும் இருக்கும்.

இந்தப் புதுவருடத்தில் பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதிநிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனாலும் வீண் செலவு செய்வதை தவிருங்கள். எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது சுணக்கமான பலன்கள் இருந்தாலும் நடுப்பகுதியில் இருந்து நல்ல பலன்கள் நடக்கத் துவங்கி படிப்படியாக உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்கள் மிகவும் முன்னேற்றமாக இருக்கும்.

அரசுத்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை வரலாம் உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள்.

தனியார் துறையினர் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம்தான்.

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களின் ஆசை இப்போது நிறைவேறும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தியவர்கள் முழுதாக முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். எதிர்கால முதலீடாக குழந்தைகள் பெயரிலோ அல்லது உங்கள் பேரிலோ வீட்டுமனை வாங்குவீர்கள்.

இதுவரை வீடு வாங்க தடை இருந்தவர்களுக்கு தடை நீங்கி நல்ல வசதியான வீடு அமைய போகிறது. வாடகை வீட்டில் இருப்பவர்கள் இனிமேல் குத்தகை அடிப்படை வீட்டிற்காவது மாற முடியும். இதுவரை வாகனம் அமையாதவர்களுக்கு வாகனம் அமையும். ஏற்கனவே இருக்கும் வாகனத்தை விற்றுவிட்டு அதை விட நல்ல வாகனம் வாங்க முடியும். சொகுசு வாகனம் வாங்குவதற்கும் அமைப்பு இருக்கிறது.

தாய்வழி சொந்தங்களிடம் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் தீரும். அம்மாவின் ஆதரவு கிடைக்கும். தாயார் வழியில் நன்மைகள் உண்டு. மாமன்கள், சித்திகள் உதவுவார்கள். உயர்கல்வி கற்க இருந்து வந்த தடைகள் நீங்கி சிலர் மேற்படிப்பு படிப்பீர்கள்.

வீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக்கவலை இப்போது நீங்கும்.

புத்திரஸ்தானமான ஐந்தாமிடத்தில் சனி செவ்வாய் இணைந்து நீடித்திருப்பதால் பள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் கடகராசிக்காரர்கள் குழந்தைகளின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. வேறு ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது.

பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றால் கோபப்பட வேண்டம். நொந்து கொள்ள வேண்டம். இது உங்கள் தகப்பனாரிடம் நீங்கள் கட்டுப் பெட்டியாக வாழ்ந்த காலம் போல இல்லை. இது இளைஞர்களின் காலம். செல்போன் யுகம். நீங்கள் பிறந்த போது தொலைபேசி, டிவி, வீடியோ, இன்டர்நெட் என்று எதுவுமே கிடையாது. ஆனால் இப்போது உங்களின் குழந்தைகள் பிறக்கும்போதே கர்ணனின் கவசகுண்டலம் போல அவற்றோடுதான் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உடல்நலத்தில் அதிக கவனமுடன் இருப்பது நல்லது. சிறிய விஷயமாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி அனைத்து மருத்துவ பரிசோதனையும் செய்து குணமாக்கிக் கொள்ளுங்கள். சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற நோய் உள்ளவர்கள் அடிக்கடி நோய் கட்டுக்குள் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் சிரமப்பட வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே கவனமாக இருங்கள்.

ரியல் எஸ்டேட், வீடு கட்டி விற்போர், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், காய்கறி மொத்த வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும் வெள்ளை நிறம் சம்பந்தப் பட்ட தொழில் செய்பவர்களுக்கு பட்ஜெட்டை மீறி செலவுகளும் விரயங்களும் இருக்கும் என்றாலும் நல்ல வருமானம் வந்து அனைத்தையும் ஈடு கட்டும்.

வம்பு வழக்கு வரும் நேரம் இது. தேவையில்லாமல் எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். யாரிடமும் அனாவசியமாக பேசி சிக்கலை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். ஏதேனும் கோர்ட் போலிஸ் ஸ்டேஷன் வழக்கு போன்றவைகளில் சிக்கி அலையக் கூடிய வாய்ப்பு இருப்பதால் எல்லாவற்றிலும் உஷாராக இருங்கள்.

பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும், கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் இருக்கும் ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். கேட்டது கேட்ட இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள்.

கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். அடுத்த வருட ஆரம்பத்தில் அதனால் சிக்கல்கள் வரக்கூடும். யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். சமரசம் செய்து வைப்பது, பஞ்சாயத்து பண்ணுவது போன்றவைகள் பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள்.

வருடத்தின் பிற்பகுதியில் சிலர் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே எந்த ஒரு விஷயத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது மிகவும் நன்மையைத் தரும்.

No comments :

Post a Comment