Wednesday, January 13, 2016

2016 தை மாத பலன்கள்

மேஷம்:

மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் ராசியைப் பார்ப்பதும் ராசிக்கு குருவின் பார்வை இருப்பதும் தை மாதம் மேஷராசிக்கு நல்ல பலன்களை தரும் மாதமாகவே இருக்கும். மேலும் பிள்ளைகளால் சுபச்செலவுகளோ, வீட்டில் சுப விஷேசங்களோ இருக்கும். யோகாதிபதி சூரியன் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் இருப்பதும் உங்களுக்கு நன்மைகளைத் தரும் அமைப்பு என்பதால் இந்த மாதம் உங்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் முன்னேற்றங்களும், பணவரவுகளும், லாபங்களும், தாராளமாக இருக்கும்.

எதிர்கால முன்னேற்றதிற்கான மாற்றங்கள் இந்த மாதம் நடைபெறும். ஒரு சிலருக்கு அடிப்படை அமைப்புகளில் மாற்றங்கள் இருக்கும். இன்னும் சிலருக்கு வீடுமாற்றம், தொழில் இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவைகள் நடக்கலாம். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இது போன்ற கிரகநிலை இருக்கும் நேரங்களில்தான் சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படும்.

சனி எட்டில் இருப்பதால் எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். பணவிஷயத்தில் கவனம் தேவை. வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும். பணவரவுகள் இந்த மாதம் நன்றாக இருக்கும் என்பதால் சிக்கனத்தை கடைபிடியுங்கள். தேவையற்ற பொருட்கள் வாங்குவதால் விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

ரிஷபம்:

மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் எட்டில் மறைந்து பகைபெற்று குருவின் வீட்டில் வலு இழப்பதால் இந்தமாதம் சுமாரான மாதமாகவே இருக்கும். அதே நேரத்தில் ராசிநாதனே ஆறுக்குடையவனாகி எட்டில் மறைவதால் கடன் தொல்லைகளோ, மறைமுக எதிர்ப்புகளோ அருகில் வராது. பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கும் காவல் துறையினருக்கும் நன்மைகள் உண்டு.

சிலருக்கு அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. குறிப்பிட்ட சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகலாம். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல்நலத்தில் கவனம் வைக்க வேண்டும்.

ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். கலைஞர்களுக்கு இது நல்ல மாதமாக அமையும். எவரையும் நம்பி மனதில் உள்ளதை வெளிப்படையாக பேச வேண்டாம். வியாபாரிகளுக்கு சில விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. வருமானம் குறைவதற்கு வாய்ப்பு இல்லை. அரசுத் துறையினருக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். தந்தைவழியில் நல்ல சம்பவங்கள் இருக்கும்.

மிதுனம்:

தை மாதம் மிதுனத்திற்கு நல்ல மாதமாகவே அமையும். இதுவரை நான்காம் இடத்தில் அமர்ந்து வீடு வாகனம் தாயார் விஷயத்தில் உங்களை கவலைப்பட செய்து கொண்டிருந்த ராகுபகவான் இந்த மாதத்துடன் மூன்றாமிடத்திற்கு மாறி உங்களுக்கு நன்மைகளை செய்யக் காத்துக்கொண்டு இருக்கிறார் என்பதால் மிதுனத்திற்கு இனிமேல் யோகம்தான். யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் நினைக்கும் காரியத்தை வெற்றிகரமாக சாதித்துக் காட்ட முடியும்.

தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு மாதம் முற்பகுதியில் சுமாரான பலன்களும் பிற்பகுதியில் அனைத்து நல்ல பலன்களும் நடக்கும். பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் இருக்கலாம். குறிப்பாக கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளை கண்காணிப்பது நல்லது. எதிர்பாராத பணவரவு இருக்கும்.

பூர்வீக சொத்தில் இருந்துவந்த வில்லங்கங்கள் விலகும். அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். இதுவரை நல்ல வேலை கிடைக்காத இளையபருவத்தினர் இந்த மாதம் மனதிற்கு பிடித்த வேலையில் சேருவீர்கள். சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும்.

கடகம்:

கடகராசிக்கு யோகாதிபதிகளான செவ்வாய் குரு சூரியன் நல்ல நிலையில் இருப்பதால் இந்தமாதம் எதையும் சமாளிப்பீர்கள். பணவரவிற்கு பஞ்சம் இல்லை. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணை விஷயத்தில் இந்த மாதம் சில உல்லாச அனுபவங்கள் இருக்கும். பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இந்த மாதம் நல்ல செய்தி உண்டு. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள்.

வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வயதான சிலர் பேரன், பேத்திகளை பார்ப்பதற்காக வெளிநாடு போவீர்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இந்த மாதம் மிகவும் நல்ல மாதமே. குறிப்பாக காவல்துறை போன்ற அதிகாரம் மிக்க துறையினர் வளம் பெறுவார்கள். ராஜ கிரகங்கள் அனைத்தும் வலுவாக இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. நீண்ட நாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு உடனடியாக திருமணம் உறுதியாகும்.

பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் இருக்கலாம். குறிப்பாக கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளை கண்காணிப்பது நல்லது. நீண்ட காலமாக முடியாமல் இழுத்துக் கொண்டு இருந்த விஷயங்கள் சாதகமான முடிவுக்கு வரும். தனாதிபதி சூரியன் மாதம் முழுவதும் ராசியைப் பார்ப்பதால் எதிர்பாராத நல்ல பணவரவு உங்களுக்கு இருக்கும். குலதெய்வ தரிசனம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவீர்கள்.

சிம்மம்:

சிம்மநாதன் சூரியன் ஆறில் மறைந்து சனிபகவான் சூரியனையும் ராசியையும் பார்ப்பது சிறப்பான நிலை அல்ல என்றாலும் ராசிநாதன் சூரியனுக்கு யோகாதிபதி செவ்வாயின் பார்வை இருப்பதால் எதிர்மறைபலன்கள் நடந்தாலும் அவை அனைத்தும் சூரியனை கண்ட பனி போல உடனே மறைந்து கெடுதல்கள் எவையும் உங்களை அணுகாது என்பது உறுதி. அதேநேரம் மாதம் முழுவதும் ஒன்பதுக்குடைய செவ்வாய் ஒன்பது பத்தாமிடங்களைப் பார்த்து தனயோகம் உண்டாவதால் இந்த மாதம் சிம்மத்திற்கு பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றின் மூலம் நன்மைகள் கிடைக்கும் மாதமாக இருக்கும்.

நீண்ட காலமாக முடியாமல் இழுத்துக் கொண்டு இருந்த விஷயங்கள் சாதகமான முடிவுக்கு வருதல் இப்போது நடக்கும். பொதுவாழ்வில் அக்கறையும், நேர்மையான எண்ணங்களையும் கொண்டவர்களான உங்களுக்கு இந்த மாதம் செலவுகள் அதிகமாக இருக்கும் என்று கிரக நிலைகள் காட்டுகின்றன. பணம் இருந்தால் தானே செலவு செய்ய முடியும். எனவே பணவரவும், தனலாபங்களும் இந்த மாதம் உங்களுக்கு நிறைவாகவே இருக்கும்.

வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுத்து போங்கள். வீண் ஈகோவை தவிர்ப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் வராமல் தடுக்கலாம். தந்தைவழி உறவினர்களிடம் இருந்து உதவிகள் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். குறிப்பாக காவல் துறையினருக்கு பதவிஉயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் நிற்கும் பாக்கித் தொகை கைக்கு கிடைத்தல் போன்றவைகள் நடக்கும்.

கன்னி:

மாதம் முழுவதும் எட்டிற்குடைய செவ்வாய் இரண்டில் அமர்ந்து எட்டாமிடத்தைப் பார்த்து வலுப்படுத்தினாலும் ராசிநாதன் புதபகவான் சுக்கிரனுடன் இணைந்து ஐந்தாம் வீட்டில் சனி பார்வையில் இருப்பது நன்மையை தரும் அமைப்பு என்பதால் தை மாதம் உங்களை பெறுத்தவரையில் விசேஷமான மாதம்தான். வீட்டில் சுபகாரியங்களுக்கான முன்னோட்டம் இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். நண்பர்கள் உதவுவார்கள்.

சிறு சிறு உடல்நலப் பிரச்னைகள் வரலாம். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழல்கள் உருவாகலாம். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும். கணிதம், அக்கௌன்ட், மென்பொருள் துறையினர்கள் மேன்மை அடைவார்கள். குலதெய்வ தரிசனம் கிடைக்கும். கணவன், மனைவி உறவு அனுசரணையாக இருக்கும். நண்பர்கள் உதவுவார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு.

விளையாட்டு துறையினர், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் திருப்பு முனையாக அமையும். ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். வெகு சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு தற்போது திருமணம் கை கூடும் நேரம். அலுவலகத்தில் வீண் பேச்சுகளைத் தவிருங்கள். அவற்றால் தேவையற்ற விரோதங்கள் வரலாம்.

துலாம்:

ஏழரைச்சனியின் முக்கால்வாசி பகுதியை கடந்துவிட்ட உங்களுக்கு இனிமேல் கெடுபலன்களை தருகின்ற வலிமையை சனி இழக்கிறார். எனவே இனிமேல் துலாம் ராசிக்கு துயரங்கள் எதுவும் இல்லை. ராசியில் செவ்வாய் இருப்பதால் சிறு சிறு உடல்நலப் பிரச்னைகள் வரலாம். கடன் வாங்க வேண்டிய சூழல்கள் உருவாகலாம். சற்றுக் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். இனம் தெரியாத மனக்கலக்கங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களுக்கு உதவிகளும் தேவைகளை நிறைவேற்றுதலும் இருக்கும். கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் மிகச் சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.

பொதுவாழ்வில் அக்கறையும், நேர்மையான எண்ணங்களையும் கொண்டவர்களான உங்களுக்கு இந்த மாதம் செலவுகள் அதிகமாக இருக்கும் என்று கிரக நிலைகள் காட்டுகின்றன. பணம் இருந்தால் தானே செலவு செய்ய முடியும். எனவே பணவரவும், தனலாபங்களும் இந்த மாதம் உங்களுக்கு நிறைவாகவே இருக்கும். இதுவரை நல்ல வேலை கிடைக்காத இளையபருவத்தினர் இந்த மாதம் மனதிற்கு பிடித்த வேலையில் சேருவீர்கள். சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும்.

விருச்சிகம்:

விருச்சிகராசிக்கு தற்போது ஜென்மச்சனி நடந்தாலும் குருவும் சூரியனும் நல்ல நிலைமையில் இருப்பது வரும் சோதனைகளை தடுத்து நிறுத்தி உங்களை பாதுகாக்கும் அமைப்பு என்பதால் இதுவரை கஷ்டப்பட்ட உங்களுக்கு தை பிறந்தால் வழிபிறக்கும் என்று முதுமொழிப்படி இந்த மாதம் நல்வழி திறக்கும். ஆறாமிடம் வலுப்பெறுவதால் பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கலாம்.. எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். குருபகவான் வலுவாக இருப்பதால் கெடுபலன்கள் எதுவும் உங்களுக்கு வரப்போவது இல்லை.

மாதம் முழுவதும் சூரியன் பலத்துடன் இருக்கிறார் என்பதால் இந்த மாதம் குழந்தைகளால் சந்தோஷமான செய்திகள் இருக்கும். இந்த அமைப்பு வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளை வலுப்படுத்தும் என்பதால் சுயதொழில் புரிவோருக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல வருமானம் இருக்கும். வெளிநாட்டில் இருக்கும் மகன், மகளிடமிருந்து நல்ல செய்தி வரும். குறிப்பிட்ட சிலர் பேரன், பேத்திகளை பார்க்க வெளிநாடு சென்று வருவீர்கள்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் லாபங்களை பெறுவார்கள். பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். சகோதரிகளால் செலவு உண்டு. கணவன், மனைவி உறவு சுமாராகத்தான் இருக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. விளையாட்டு துறையினர், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் திருப்புமுனையாக அமையும்.

தனுசு:

தனுசுராசி குருபகவானின் பார்வையில் இருப்பது இந்த மாதம் உங்களின் பணவரவுகளையும், தனலாபம் மற்றும் பொருளாதார மேன்மையை அதிகப்படுத்தும் ஒரு அமைப்பு என்பதால் தைமாதம் முழுவதும் எந்த விதமான பணச்சிக்கல்களோ, எதிர்ப்புகளோ உங்களுக்கு இருக்காது என்பது உறுதி. ஒருசிலர் ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். வெகு சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும்.

ஆறாமிடம் வலுப்பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். தாராளமான பணவரவு இந்த மாதம் இருக்கும். வெளிநாட்டில் இருந்து பணம் வரும். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். குறிப்பாக அத்தைகளால் உதவிகள் இருக்கும். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல் படுவது நல்லது.

இளைஞர்களுக்கு இதுவரை நடந்து வந்த எதிர்மறையான பலன்கள் நீங்கி, நல்ல பலன்கள் இனிமேல் நடக்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். இளைய பருவத்தினர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த மாதம் சந்திப்பீர்கள். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது.

மகரம்:

தை மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சனிபகவான் அவருடைய நண்பருடன் இருப்பதால் இந்த மாதம் மகரராசிக்கு எந்தவிதமான பின்னடைவுகளையும் தராது என்பதோடு பத்தாமிடத்தில் செவ்வாய் சுபவலுவுடன் இருப்பதால் சீருடை அணியும் துறைகளான ராணுவம், காவல்துறை, பாதுகாப்பு போன்ற பணிகளில் இருப்பவர்களுக்கு பதவிஉயர்வு, வேலையில் இதுவரை இருந்துவந்த சிக்கல்கள் நீங்குதல் வழக்குகள் சாதகமாகுதல் மற்றும் பொருளாதார மேன்மைகளைத் தரும் மாதமாகவும் இருக்கும்.

கணவன், மனைவி உறவு சுமாராக இருக்கும். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். உடல் நலத்தில் அக்கறை தேவை. தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும்.

அலுவலகத்தில் பெண்களின் கீழ் வேலை பார்ப்பவர்கள் இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு இந்த மாதம் சுமாரான நன்மைகள் உண்டு. கலைஞர்களுக்கு முயற்சிகளுக்கு பின்புதான் நல்லவை நடக்கும். சுயதொழில் செய்பவர்கள் வளம் பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு அலுவலகங்களில் நெருக்கடிகள் இருக்கும். பத்திரிக்கை துறையினருக்கு இது நல்ல மாதம்.

கும்பம்:

குருபகவான் ராசியைப் பார்ப்பதால் இதுவரை தடையாகி வந்த சகல பாக்கியங்களும் இப்போது உங்களுக்கு கிடைக்கும். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு. சுயதொழில் செய்வோருக்கு தொழில் முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் இப்போது நடக்கும். வியாபாரிகளுக்கு வருமானக் குறைவு இருக்காது. இளைஞர்களுக்கு இனிமேல் கெடுதல்கள் நடக்காது. குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இந்த மாதம் வாங்குவீர்கள்.

குடும்பத்தில் சுபகாரியம் இருக்கும். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் இந்த மாதம் நல்லபடியாக முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவுவார்கள். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது. காவல் துறையினருக்கு இது நல்ல மாதம். பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும். மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள்.

இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும். ஒரு சிலருக்கு எதிர்கால நல்வாழ்விற்கான அறிமுகங்கள் அடிப்படையான சில நிகழ்ச்சிகள் இந்த மாதம் நடக்கும். சிலருக்கு வேலைமாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம் போன்றவைகள் நடக்கும். இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.

மீனம்:

ராசியின் எதிர் தன்மையுடைய கிரகங்களான சூரியன், புதன், பதினொன்றாம் இடத்தில் சுபதன்மை பெற்று இருப்பதால் இதுவரை உங்களை எதிர்த்து வந்தவர்கள் மனம் மாறி உங்கள் கருத்துகளை ஆதரிக்கும் மாதமாக இது இருக்கும். மாதம் முழுவதும் எட்டில் இருக்கும் செவ்வாய் உங்களுக்கு பெண்களால் எரிச்சலையும், அவர்கள் மூலமான எதிர்மறை பலன்களையும், செலவுகளையும் தருவார் என்பதால் இந்த மாதம் எதையும் ஒரு முறைக்கு இரண்டு முறையாக யோசித்து செய்வது நல்லது.

மாத முற்பகுதியில் பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பிட்ட சிலருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் இந்த மாதத்தில் இருந்து விலக ஆரம்பிக்கும். நீண்ட நாட்களாக அம்மாவை விட்டுப் பிரிந்து இருப்பவர்கள் இந்த மாதம் அவரை நேரில் சென்று பார்த்து, ஆசிர்வாதங்களைப் பெற்று வருவது உங்களுக்கு இன்னும் சிறப்புகளைச் சேர்க்கும்.

இதுவரை நடந்து வந்த எதிர்மறை பலன்கள் இனிமேல் இருக்காது. ஆகஸ்டு மாதம் நடைபெறப்போகும் குருப்பெயர்ச்சி மிகவும் அற்புதமான பலன்களை உங்களுக்கு தரும் என்பதல் நாளை நீங்கள் நன்றாக இருக்க போவதற்கான வழிமுறைகள் இப்போதே ஆரம்பிக்கத் துவங்கும். அரசு ஊழியர் தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்பு கூடும்படியான சம்பவங்கள் இருக்கும்

2 comments :