Saturday, January 2, 2016

2016 ராகுகேதுப் பெயர்ச்சி: எந்த ராசிக்கு நன்மை?

ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ராகுகேதுப் பெயர்ச்சி இம்முறை திருக்கணிதப்படி 29-1-2016 அன்றும் வாக்கியப் பஞ்சாங்கப்படி அதற்கு முன்னதாகவே 8-1-2016 அன்றும் நடக்க இருக்கிறது.

தமிழ்நாட்டைத் தவிர்த்து இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உலகம் முழுக்கவும் இந்த பஞ்சாங்க வேறுபாடுகள் களையப்பட்டு திருக்கணிதப் பஞ்சாங்கமே பின்பற்றப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் சில மாவட்டங்களில் வாக்கியப் பஞ்சாங்கம் வழக்கில் இருக்கிறது. தமிழ்நாட்டுத் திருக்கோவில்களிலும் வாக்கியப் பஞ்சாங்கப்படியே சனி குரு ராகுகேதுப் பெயர்ச்சிகள் கொண்டாடப் படுகின்றன.

இம்முறை ராகுகேதுக்களின் மாற்றம் கன்னி, மற்றும் மீன வீடுகளில் இருந்து சிம்மம் மற்றும் கும்ப வீடுகளுக்கு நடக்க இருக்கிறது. ராகு இம்முறை மாற இருக்கும் சிம்மத்தின் அதிபதி சூரியன் ராகுவிற்கு பகைவர் என்பதால் சிம்மராகு பொதுவாக நன்மைகளைச் செய்ய மாட்டார் என்று நமது மூலநூல்கள் குறிப்பிடுகின்றன.

ஆயினும் இம்முறை ஒரு சிறப்பு நிகழ்வாக பெயர்ச்சியின் ஆரம்பம் முதல் அடுத்த ஆகஸ்டுமாதம் வரை சுபக்கிரகமான குருபகவானுடன் ராகு இணைவதால் ராகுவின் பாபத்தன்மை நீங்கப் பெற்று முதல் ஏழுமாதங்கள் உலகத்தினருக்கு நல்லபலன்களையே தருவார்.

கேதுபகவான் மாற இருக்கும் கும்பம் அவருக்கு மிகவும் பிடித்த நட்பு வீடு என்பதாலும் குருவின் பார்வை முதல் ஏழு மாதங்களுக்கு கேதுவிற்கு இருப்பதாலும் அவரும் சுபத்தன்மை பெற்றவராகிறார். எனவே இம்முறை ராகுகேதுப் பெயர்ச்சி பொதுவாக நன்மைகளையே அதிகம் செய்யும்.

அடுத்து நமது மூலநூல்களில் பாபக்கிரகங்கள் 3, 6, 11 ல் மட்டுமே பலன் தரும் என்று கூறப்பட்டிருந்தாலும், அனுபவத்தில் 12ம் வீட்டில் அமரும் ராகுகேதுக்களும் தீமை செய்வதில்லை என்பதால் இம்முறை அதையொட்டியே இந்த பலன்களைக் கணித்திருக்கிறேன்.

அதன்படி மிதுனம் துலாம் மீனம் ஆகிய ராசிகளுக்கு ராகுவும், மேஷம் கன்னி தனுசு ஆகிய ராசிகளுக்கு கேதுவும் நன்மைகளைச் செய்வார்கள். இதில் கன்னி ராசிக்கும் மீனராசிக்கும் ராகுகேதுக்கள் ஆறு பனிரெண்டாமிடங்களில் அமர்வதால் இரட்டிப்பு நன்மைகள் இருக்கும்.

கன்னிக்கு ஏழரைச்சனியும் மீனத்திற்கு அஷ்டமச்சனியும் சமீபத்தில் முடிந்ததால் இந்த ராகுகேதுப் பெயர்ச்சி இதுவரை செட்டில் ஆகாத இளையபருவத்தினர் வாழ்க்கையில் நிலைபெற வேண்டிய அனைத்து அம்சங்களையும் செய்யும்.

இவை தவிர்த்த மற்ற ராசிகளுக்கு கெடுதல்கள் நடக்குமா என்றால் நிச்சயம் கெடுதல்கள் நடக்காது. மற்ற ராசியினர் இந்த ராகுகேதுப்பெயர்ச்சி பலன்களில் கூறப்பட்டுள்ள முறையான பரிகாரங்களைச் செய்வதன் மூலம் சாதகமற்ற பலன்கள் நடைபெறாமல் காத்துக் கொள்ளலாம்.

நவக்கிரகங்களில் ராகுகேதுக்கள் மட்டுமே வித்தியாசமான கிரகங்களாகும். ஒன்பது கிரகங்களில் சூரியனும், சந்திரனும் ஒளிக்கிரகங்கள் எனவும் குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஆகியோர் பஞ்சபூதக்கிரகங்கள் எனவும் ராகுகேதுக்கள் சாயாக்கிரகங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

சாயா என்ற வார்த்தைக்கு நிழல் என்று அர்த்தம். மற்ற கிரகங்களைப் போல கல், மண்ணாகவோ அல்லது திரவ, வாயுரூபமாகவோ ஆன கண்களுக்குத் தெரியும் கிரகங்கள் அல்ல ராகு கேதுக்கள்.

பூமி சூரியனைச் சுற்றிவரும் சூரியப்பாதையும், சந்திரன் பூமியைச் சுற்றிவரும் விரிவுபடுத்தப்பட்ட சந்திரப்பாதையும் வெட்டிக்கொள்ளும் பூமி மற்றும் சந்திரனின் நிழல்களே ராகுகேதுக்கள் எனப்படுகின்றன.

இந்த இரண்டு நிழல்களையும் துல்லியமாக அறிந்து மனிதர்களின் வாழ்வில் இவைகளின் தாக்கத்தினை உணர்ந்து ராகு கேதுக்களுக்கு கிரக அந்தஸ்தினைத் தந்ததிலும், நாடு முழுவதிலும், குறிப்பிட்ட இடங்களில் நாகநாதசுவாமி என இவைகளுக்கான பரிகாரக்கோவில்களை அமைத்ததிலும் நமது மேலான இந்துமத ரிஷிகள், சித்தர்கள் மற்றும் ஞானிகளின் ஆழ்ந்த மெய்ஞானம் வெளிப்படுகிறது.

மேலைநாட்டு ஜோதிடத்தில் இவைகளுக்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனால் மகரிஷி பராசரர் ராகுகேதுக்களுக்கு மற்ற கிரகங்களைப் போல தசை வருடங்களையும் அமைத்துள்ளார். இந்திய ஜோதிடத்தில் அவரால் ராகுவிற்கு பதினெட்டு வருடங்களும், கேதுவிற்கு ஏழு வருடங்களும் ஒதுக்கப் பட்டிருக்கின்றன.

தசாபுக்தி அமைப்பில் உள்ள ஒரு சூட்சுமத்தைச் சொல்கிறேன்.. தெரிந்து கொள்ளுங்கள்.

இருபெரும் சுபக்கிரகங்களான குரு மற்றும் சுக்கிரனின் தசை, புக்திகளுக்கு முன் சாயாகிரகங்களான ராகு, கேதுவின் தசை, புக்தி வரும். அது ஏனெனில் ஒரு மனிதனுக்குத் தேவையான பணம், புகழ், அந்தஸ்து, வீடு, வாசல், மனைவி, குழந்தைகள், வாகனம் போன்ற அனைத்து சுகங்களையும் அளிப்பவை குருவும் சுக்கிரனும் மட்டுமே.

இந்த இரு சுபக்கிரகங்களும் தங்களுக்கு விதிக்கப்பட்டபடி ஒரு மனிதனுக்கு தங்களது தசையிலோ புக்தியிலோ யோகம் அளிப்பதற்கு முன் அதற்கான முன்னேற்பாடுகளை, அடிப்படை அஸ்திவாரங்களை ராகுகேதுக்கள்தான் எடுத்துச் செய்வார்கள்.

அதாவது அந்த மனிதன் பிற்காலத்தில் யோகமுடன், புகழுடன் எந்தத் துறையில் சிறந்து விளங்கப் போகிறானோ அந்த இடத்திற்கு அவனை நகர்த்தும் அமைப்பை ராகுகேதுக்கள் செய்வார்கள். இராகுகேதுக்களின் தசை அல்லது புக்தியில் இது நடக்கும்.

இந்த அமைப்பை தம் துறைகளில் உச்சத்திற்குச் சென்ற முன்னாள் முதல்வர் கலைஞர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்றவர்களின் ஜாதகத்தில் காணலாம்.

அடுத்து நம் சித்தர்களும் ஞானிகளும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்ட சில இடங்களைத் தேர்ந்தெடுத்து அமைத்த அனைத்துக் கோவில்களுக்கும் பின்னால் ஒரு மனிதன் சுகமாக வாழத் தேவையான அனைத்து உன்னத அம்சங்களும் உள்ளன.

நமது திருக்கோவில்கள் அனைத்துமே ஜோதிடப்படி ஜோதிடத்திற்காக நிறுவப்பட்டவைதான். ஒவ்வொரு ஆலயமும் ஒரு மனிதன் தனக்கான கிரக வலுவைப் பெற்று தன வாழ்வை செம்மையாக்கிக் கொள்ள ஏற்படுத்தப் பட்டவை.

பிறந்த ஜாதகத்தில் நன்மை செய்யும் கிரகத்தின் வலிமை குறைவாக அமைந்த நிலையில் இருக்கும் ஒருவர் தனக்கான திருக்கோவிலை அறிந்து அத்தலத்தில் முறைப்படி வழிபடுவதன் மூலமும், அந்தத் திருக்கோவில்களுக்குள் ஒரு நாழிகைக்கும் (24 நிமிடங்கள்) குறையாமல் இருந்து அர்ச்சனை அபிஷேகம் போன்றவைகளைச் செய்வதன் மூலமும் வலுக்குறைந்த அந்தக் கிரகத்தின் பலன்களைப் பெற்று வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் அடைந்து மேம்பட முடியும். கிரக தோஷங்களைப் போக்கிக் கொள்ள முடியும்.

குறிப்பிட்ட கோவில்களுக்கு ஏற்றபடி நாம் கிரகவலுவைப் பெறுவதற்காகவே ஒரு நாழிகை, ஒருஜாமம், ஒரு இரவு ஒரு முகூர்த்தம் என அந்த திருத்தலங்களுக்குள் நாம் இருப்பதற்கான காலவரையறையையும் ஞானிகள் நிர்ணயித்திருக்கிறார்கள்.

ஸ்ரீகாளஹஸ்தி போன்ற புனித இடங்களில் நாம் ஓர் இரவு தங்கி பரிகாரம் செய்வது இந்தக் காரணத்திற்காகத்தான்.

அதன்படி நாகநாதசுவாமி என்ற பெயரில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்துத் திருக்கோவில்களும், நாகதேவதைகளாக உள்ள அம்மன் கோவில்களும், சில புகழ்பெற்ற சுயம்புவான புற்றுக்கோவில்களும் ராகுகேதுக்களுக்கான பரிகாரக் கோவில்கள்தான்.

குறிப்பிட்ட கோவில்களுக்கென உள்ள பரிகார முறைகளைச் சரியானபடி நாம் செய்வதன் மூலம் ராகுகேதுக்களின் தோஷங்கள் நீங்கப் பெற்று நம் வாழ்வில் எல்லா நன்மைகளையும் அடையலாம்.

குறிப்பாக தொண்டைமண்டலம் எனப்படும் சென்னையைச் சுற்றி உள்ளவர்களுக்கு ஸ்ரீகாளஹஸ்தி மிகச்சிறந்த பரிகாரஸ்தலம். அதேபோல காஞ்சிபுரம் பஸ்நிலையம் அருகில் உள்ள அருள்மிகு சித்திரகுப்தன் ஆலயம் கேதுபகவானுக்கு மட்டுமென உள்ள கண்கண்ட பரிகாரஸ்தலம்

கேதுவின் அதிதேவதை சித்திரகுப்தன் என்பதால் ஒருவரின் ஜாதகத்தில் கேதுவால் ஏற்படும் புத்திர களத்திர தோஷங்களைப் போக்கும் வல்லமை இத்திருக்கோவிலுக்கு உண்டு.

தென்மாவட்டத்தவர்களுக்கென சோழப் பேரரசர்களால் நிர்மாணிக்கப்பட்ட திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ள ராகுபகவான் திருத்தலமும், கீழ்ப்பெரும் பள்ளத்தில் அமைந்திருக்கும் கேதுபகவான் திருக்கோவிலும் இந்த நிழல் கிரகங்களின் தோஷம் போக்குபவை.

சோழர்களின் முதன்மை மந்திரியாக இருந்த குன்றத்தூர் சிற்றரசர் சேக்கிழார் பெருமான் வயதான காலத்தில் ரதத்தில் சென்று வழிபட முடியவில்லை என்ற காரணத்தினால் முறைப்படி அமைத்த தொண்டை மண்டல நவக்கிரகதலங்களில் ஒன்றான வடதிருநாகேஸ்வரம் எனப்படும் சென்னை குன்றத்தூர் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோவிலும், போரூர் அருகில் உள்ள வட கீழ்ப்பெரும்பள்ளம் எனப்படும் கெருகம்பாக்கம் அருள்மிகு நீலகண்டேஸ்வரர் ஆலயமும் நாகதோஷம் போக்கும் சக்திவாய்ந்த ஸ்தலங்கள்.

கொங்கு மண்டலம் எனப்படும் மேற்குத் தமிழ்நாட்டில் அமைந்துள்ள சக்தி வாய்ந்த திருத்தலமான கொடுமுடியில் முறையாக கற்றுத்தேர்ந்த அந்தணர்களால் ராகுகேதுவிற்கான பரிகார பூஜைகள் சிறப்பாகச் செய்யப்படுகின்றன.

ஒரு மனிதனின் ஜாதகத்தில் அவனுடைய வாழ்க்கையின் அத்தியாவசிய அமைப்புக்களான கல்வி, வேலை, திருமணம், குழந்தைகள் ஆகியவற்றைத் தடுக்கும் தோஷங்களான களத்திரதோஷம், புத்திரதோஷம் ஆகியவை பெரும்பாலும் இந்த சர்ப்பக் கிரகங்களால்தான் உண்டாகின்றன.

ஒரு நல்ல அனுபவமுள்ள ஜோதிடருக்கு இந்த தோஷங்களை முழுமையாகக் கணிக்கும் திறமை வேண்டும். எல்லாவகையான களத்திரதோஷங்களுக்கும் சிலர் ஸ்ரீகாளஹஸ்தியில் சர்ப்பசாந்தி பூஜையை மட்டுமே தீர்வாகச் சொல்கிறார்கள். இது தவறு.

சாதாரண காய்ச்சல் என்றால் மெடிக்கல்ஷாப்பில் ஒரு குரோசின் மாத்திரை வாங்கிச் சாப்பிட்டால் காய்ச்சல் போய் விடும். டைபாய்டு காய்ச்சலுக்கு அதே குரோசின் மாத்திரை சாப்பிட்டால் நோய் தீருமா?

ராகுவால் உண்டாகும் சில குறிப்பிட்ட அதீத களத்திர தோஷங்களுக்கு சர்ப்பசாந்தி பூஜையை விட ஸ்ரீகாளஹஸ்தியில் ருத்ராபிஷேகப்பூஜை செய்வதே சிறந்த பரிகாரமாக அமையும்.

ருத்ராபிஷேகப்பூஜை என்பது, எல்லாம் வல்ல இறைவி அம்மை ஞானப்பிரசுன்னாம்பிகை முன்பும், அடுத்து நம்மைக் காத்தருளும் அய்யன் எம்பெருமான் ஸ்ரீகாளத்திநாதனின் முன்பும் நம்மை இருக்கச் செய்து செய்யப்படுவது.

அதிகாலையில் செய்யப்படும் இந்தப் பூஜையினால் தோஷம் இருக்கும் ஒருவர் அம்மை அப்பன் இருவர் சந்நிதியிலும் அவர்கள் திருமேனி முன்பு குறைந்த பட்சம் இருபது நிமிடங்களாவது இருக்க முடியும். இது ஒன்றே ராகுவின் தடையை நீக்கச் செய்து நமக்கான இன்பத்தை இவ்வாழ்வில் நமக்கு கிடைக்கச் செய்கிறது.

நம் மேலான இந்து மதத்தில் நம் சித்தர்களும் ஞானிகளும் சொல்லியுள்ள முறையான பரிகாரங்களைச் செய்வதன் மூலம் அனைத்து ராசிக்காரர்களும் கிரகதோஷங்களும், ராகுகேதுப் பெயர்ச்சி போன்ற கிரகமாற்றங்களில் நடக்கும் தங்களது ராசிக்கான கெடுபலன்களும் நீங்கப் பெற்று சுகவாழ்வு வாழமுடியும் என்பது நிச்சயம்.

இனி தனித்தனி ராசிகளுக்கான பலன்களைக் காணலாம்....

2 comments :

  1. date of birth : 28.10.1974 - mid night 12:54 place : udumalai
    any specialised in this astrology for this person.
    pl advice Guruji

    ReplyDelete