Thursday, December 31, 2015

விருச்சிகம்: 2016 ராகு – கேது பெயர்ச்சிப் பலன்கள்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு தற்போது ஏழரைச்சனியில் ஜென்மச்சனி அமைப்பு நடந்து கொண்டிருக்கிறது. பொதுவாக கோட்சார அமைப்புகளில் சனியின் நன்மை-தீமைகளே ஒருவரை அதிகம் பாதிக்கும் என்பது ஒரு பொதுவிதி. கோட்சார நிலைமைகளில் மற்ற கிரகப் பெயர்ச்சிகள் அனைத்தும் ஏழரைச்சனிக்கு கட்டுபட்டவைதான்.

உதாரணமாக கடுமையான ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கும்போது நல்ல நிலையில் வேறு ஒரு கிரகம் இருந்தாலும் அந்த கிரகத்தால் கொடுக்கப்பட இருக்கும் நற்பலன் சனியால் தடுக்கப்படும். ஏழரைச்சனியை ஓரளவிற்கு கட்டுப்படுத்துவது குருவின் பார்வை மட்டும்தான்.

அந்தவகையில் சென்றமுறை நடந்த ராகு-கேதுப் பெயர்ச்சியில் மிகவும் நல்ல பலன்களைத் தரக்கூடிய பதினொன்றாமிடத்திற்கு ராகு மாறினார். அதிலும் அவருக்கு மிகவும் பிடித்த நட்புவீடான கன்னிராசியில் ராகு அமர்ந்திருந்தார். இந்த பதினொன்றாமிட ராகு சென்றமுறை விருச்சிகராசிக்கு அபரிதமான நன்மைகளை அளித்திருக்க வேண்டும்.

ஆனால் என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் கடந்த ஒன்றரை வருட காலமாக எந்த ஒரு விருச்சிக ராசிக்காரரும் ராகுவின் பதினொன்றாம் இட நன்மைகளை அனுபவிக்கவில்லை. மாறாக ஏழரைச்சனியின் கடுமைகள்தான் விருச்சிகத்திற்கு நடந்தன.

சனியின் இரண்டாம் சுற்றில் இருந்த ஐம்பது வயதிற்கு மேற்பட்ட விருச்சிக ராசிக்காரர்களுக்குக் கூட ஏழரைச்சனியின் கடுமையின் முன்னால் பதினொன்றாமிட ராகு எடுபடாமல் சாதகமற்ற பலன்களே நடந்ததை நான் நேரிடையாக உணர்ந்தேன்.

பிறந்த ஜாதக வலுவுள்ள ஒரு சில விருச்சிக ராசிக்காரர்கள் மட்டும் இந்த ஏழரைச்சனியின் கெடுபலன்களிலிருந்து தப்பித்திருக்கலாம். ஆனால் பெரும்பாலான விருச்சிக ராசிக்காரர்களின் துன்பங்கள் எழுத முடியாதவை.

என்னிடம் கடந்த இரண்டு வருடங்களாக ஜாதகம் பார்க்க வந்தவர்களில் எண்பது சதவீதம் பேர் விருச்சிக ராசிக்காரர்கள் அல்லது விருச்சிக ராசியினை வீட்டினில் கொண்டவர்கள்.

இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியில் நான் சொல்ல வருவது என்னவெனில் தற்போது உங்கள் ராசிக்கு மாற இருக்கும் ராகுவிற்கான பத்தாம் இடமும், கேதுவிற்கான நான்காம் இடமும் நன்மையைத் தரும் இடங்களாக நமது மூலநூல்களில் சொல்லப்படவில்லை.

பத்தாமிடத்திற்கு மாறும் ராகு வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளையும் நான்காமிடத்திற்கு மாறும் கேதுபகவான் வீடு, வாகனம், தாயார், சுகம் போன்ற அமைப்புகளையும் பாதிப்பார் என்று நமது மூல நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால் சென்றமுறை பதினொன்றாமிடத்தில் மிகுந்த நன்மைகளைச் செய்திருக்க வேண்டிய ராகுபகவான் விருச்சிகராசிக்கு எந்த நன்மைகளையும் செய்ய விடாமல் ஏழரைச்சனியால் தடுக்கப்பட்டு நன்மைகளைச் செய்யாத போது இப்போது மட்டும் பத்தாமிடத்திலும், நான்காமிடத்திலும் ராகு-கேதுக்கள் என்ன பெரிய கெடுதல்களை உங்களுக்கு செய்து விடப்போகிறது?

ஏற்கனவே பெரும்பாலான விருச்சிக ராசிக்காரர்களின் தொழில், வேலை, வியாபாரம், வீடு, குடும்பம் போன்றவைகள் சாதகமற்ற நிலைகளில் இருந்து கொண்டிருக்கும் போது இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியால் இவற்றால் நன்மைகள் வேண்டுமானால் இருக்கலாமே ஒழிய இதைவிடத் தீமைகள் விருச்சிகராசிக்கு இருக்கப் போவது இல்லை.

எனவே தற்போது பத்தாமிடத்திற்கு மாறும் ராகுபகவானாலும் நான்காமிடத்திற்கு மாறும் கேதுபகவானாலும் தீமைகள் என்று எதுவும் விருச்சிக ராசிக்கு சொல்வதற்கு இல்லை. தீமைகள் எதுவும் உங்களுக்கு ராகு-கேதுக்களால் நடக்கவும் செய்யாது.

மேலும் சனிபகவான் தற்போது அனுஷ நட்சத்திரத்தில் தன்னுடைய பயணத்தை முடித்து இந்த 2016 ஜனவரி முதல் கேட்டை நட்சத்திரத்தில் சென்று கொண்டிருக்கிறார். எனவே விருச்சிக ராசியிலும் அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு இனிமேல் கண்டிப்பாக தீமைகள் இருக்கப்போவது இல்லை.

வக்ர நிலையில் மீண்டும் அனுஷ நட்சத்திரத்திற்கு சனி வருவார் என்றாலும் வக்ரச்சனிக்கு வலுக்குறைவு என்பதால் யாருக்கும் பாதிப்புக்கள் இருக்காது. எனவே எந்த ஒரு நிலையில் பார்த்தாலும் சனியாலும், ராகு-கேதுக்களாலும் 2016 முதல் விருச்சிகராசிக்கான துன்பங்கள் படிப்படியாகக் குறைந்து அடுத்த வருடம் முதல் விருச்சிகராசிக்கு நிம்மதி பிறக்கும் என்பது உறுதி.

அதே நேரத்தில் நீங்கள் இப்போது சனியின் ஆதிக்கத்தில் இருப்பதால் இன்னும் இரண்டு வருடங்களுக்கு தொழில்ரீதியாக எந்தவித புது முயற்சிகளும் செய்யாமல் இருப்பது நல்லது. அதிகப் பணத்தை முதலீடு செய்து தொழில் ஆரம்பிப்பதோ இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வதோ புதிய கிளைகள் ஆரம்பிப்பதோ வேறு எந்த வகையிலும் புதியவைகளைச் செய்வதோ வேண்டாம்.

தொழிலை விரிவுபடுத்துவதற்கு இது சரியான நேரம் அல்ல. இருக்கும் தொழிலை அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் புதிய கிளைகள் ஆரம்பிக்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ, மேற்கொண்டு அதிகமான முதலீடு செய்யவோ வேண்டாம்.

விருச்சிகத்தினர் அனைத்து சோதனைகளையும் வெற்றியாக, சாதனைகளாக மாற்றக்கூடியவர் என்பதால் இனிமேல் ஏழரைச்சனி பெரிதாக ஒன்றும் உங்களைப் பாதிக்காது. சனியை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.

இதுவரை பணவிஷயத்தில் புரட்ட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் மேம்பாடான நிலையைக் காண்பீர்கள். நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நடக்கப்போகும் காலம் இது. எனவே இனிமேல் உங்களின் உடல்நிலையும் மனநிலையும் தெளிவாகவும் உற்சாகத்துடனும் இருக்கும்.

உங்களில் பெரும்பாலோருக்கு இதுவரை வேலை தொழில் வியாபாரம் போன்ற விஷயங்களில் மனதிற்குப் பிடிக்காத சம்பவங்களும், உழைப்பிற்கேற்ற ஊதியமும், நியாயமான பதவிஉயர்வும் கிடைக்காத நிலை இருந்து வந்தது.

இதுவரை நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு தள்ளிப் போயிருந்த பதவிஉயர்வு சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். எல்லா வகையிலும் வருமானம் நன்றாக இருக்கும்.

அலுவலகத்தில் இதுவரை புரமோஷன் கிடைக்காதவர்கள் பதவிஉயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பளஉயர்வு கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார்.

சுயதொழில் புரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். உங்களின் எதிரிகள் ஓட்டம் பிடிப்பார்கள். விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற எல்லாத்துறையினருக்கும் இனிமேல் நல்லபலன்கள் நடக்கும்.

வாழ்க்கைத் துணைவரின் மூலம் பொருளாதார வசதிகள், ஆதரவானபோக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.

வீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக்கவலை இப்போது நீங்கும். இதுவரை புத்திரபாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு குழந்தை பிறக்கும்.

தொழில் வியாபாரம் வேலை மற்றும் இருப்பிடங்களில் இடமாற்றம் ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்பெறும். உங்களில் சிலர் வெளிநாட்டுப் பயணம் செய்வீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தற்போது வேலை கிடைக்கும்.

இளம் பருவத்தினர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த வருடம் சந்திக்க வாய்ப்பு இருப்பதால் உங்களுக்கு காதல் வரக்கூடும். முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும்.

வயதானவர்களில் இதுவரை தீர்த்தயாத்திரை செல்லாதவர்கள் நினைத்த புனிதத்தலத்திற்கு சென்று வருவீர்கள். மகன் மகள்களால் பெருமைப்படக் கூடிய செய்திகள் இருக்கும். வீடு வாங்குவதற்கு இருந்த தடை நீங்கி வீடு வாங்கவோ கட்டவோ முடியும். மொத்தத்தில் இனிமேல் விருச்சிக ராசிக்குத் துன்பங்கள் எதுவும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. சனியின் கடுமை இனிமேல் குறையும் என்பதால் உங்களுக்கு இனி ஒரு குறையும் இல்லை.

விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு:

யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம். யாருக்கும் எதுவும் செய்து தருவதாக தேவையில்லாத வாக்குறுதி கொடுக்க வேண்டாம். சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்யும்படி இருக்கும். சகோதரிகளால் செலவு உண்டு. என்னதான் செய்தாலும் அண்ணன் எனக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று தங்கைகள் கூறுவார்கள்.

அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு:

வேலையில் இருப்பவர்கள் தங்களின் மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது. தேவையில்லாமல் வேலையை விட வேண்டாம். பிறகு அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு அவைகள் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும். இதுவரை காணாமல் போயிருந்த உங்களின் விடாமுயற்சியும் தைரியமும் மீண்டும் உங்களிடம் தலையெடுத்து அனைத்து பிரச்னைகளையும் நீங்கள் தனியொருவராகவே சமாளித்து தீர்க்கப் போகிறீர்கள்.

கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு:

யூகவணிகம் பங்குச்சந்தை ரேஸ் லாட்டரி போன்றவைகளில் அதிகமாக ஈடுபாடு காட்டாமல் இருப்பது நல்லது. மேற்படி இனங்களில் வருமானம் வராமல் விரயங்களும் நஷ்டங்களும்தான் இருக்கும். ஒரு சிலர் தொழில் சம்பந்தமாக கடல் தாண்டி வெளிநாடு செல்வீர்கள். குறிப்பாக ஆன்மிகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் ஏற்படும். வெளிநாடு சம்பந்தமான முயற்சிகள் வெற்றியாகும். பாகப்பிரிவினை சம்பந்தமான முக்கியமான முடிவுகள் எடுப்பதை தற்போது தள்ளிப் போடுவது நல்லது.

பரிகாரங்கள்

ஏழரைச்சனியின் நடுப்பகுதியான ஜென்மச்சனி அமைப்பில் நீங்கள் இருப்பதால் அருகில் இருக்கும் பழமையான ஈஸ்வரன்கோவிலில் உள்ள காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். ராமதாசன் ஸ்ரீஹனுமனுக்கு சனிக்கிழமை தோறும் நெய்தீபம் ஏற்றுவதும் சனியின் கடுமையை அண்டவிடாது பாதுகாக்கும். ஏழரைச்சனி முடியும் வரை தனித்த சனியின் சந்நிதி முன் நின்று வணங்க வேண்டாம்.

2 comments :