Thursday, December 31, 2015

மிதுனம்: 2016 ராகு – கேது பெயர்ச்சிப் பலன்கள்

மிதுனம்

மிதுனராசிக்கு தற்போது இருக்கும் நான்காமிடத்தில் இருந்து மிகவும் நல்ல பலன்களைக் தரக்கூடிய தைரியம் கீர்த்தி சகாயஸ்தானம் எனப்படும் மூன்றாமிடத்திற்கு ராகுபகவான் மாறுகிறார். இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியால் நன்மைகளை அடைய போகும் ராசிகளுள் மிதுனமும் ஒன்று.

ராகுபகவான் தான் இருக்கும் வீட்டின் அதிபதியை போலவும் தன்னுடன் சேர்ந்திருக்கும் கிரகத்தின் தன்மைகளை போலவும் பலன்களைச் செய்யக்கூடியவர் என்பதால் இம்முறை உங்களின் மூன்றாமிடத்தின் அதிபதியும் உங்கள் ராசிநாதனின் முதல்நிலை நண்பருமான சூரியனின் வீட்டில் அமர்வதால் சூரியனைப் போலவும் ஏற்கனவே அங்கிருக்கும் குருபகவானுடன் இணைந்து சுபத்துவம் பெறுவதால் சுபராகுவாகவும் மாறி மிகுந்த நன்மைகளை இம்முறை மிதுனராசிக்குத் தருவார்.

இதில் மேலும் ஒரு நல்ல அமைப்பாக உங்கள் ராசியின் பாக்யாதிபதியான சனிபகவானின் பார்வையையும் ராகு பகவான் பெறுவதால் ராகுவிற்கு தர்மகர்மாதிபதிகளின் சம்பந்தம் உண்டாகி மிகச்சிறந்த நன்மைகளை தரும் அதிகாரம் பெற்று 2016-ம் ஆண்டு முற்பகுதி வரை அளவு கடந்த நன்மைகளை மிதுன ராசிக்கு தருவார்.

ராகுபகவான் மூன்றாமிடத்தில் நிலைகொள்வதால் உங்களுடைய சொல்லாற்றல், செயல்திறன், வாக்குப்பலிதம், மனதைரியம், எதையும் சமாளிக்கும் திறன், தெளிவான சிந்தனை போன்ற அனைத்துப் பண்புகளும் இப்போது உறுதி பெற்று மிகச்சிறந்த நல்லமுடிவுகளை இந்தக் காலகட்டத்தில் நீங்கள் எடுத்து உங்களுடைய எதிர்காலத்தை வளமாக்கி கொள்வீர்கள்.

அதிலும் குறிப்பாக அடுத்த சித்திரை வைகாசி ஆனி ஆடி மதங்களில் மிதுனராசிக்காரர்கள் வாழ்வின் சில முக்கிய திருப்புமுனையான அமைப்புகளைப் பெறுவீர்கள் என்பதோடு அதன்மூலம் உங்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாகவும் இருக்கும் என்பதும் உறுதி.

மேலும் இதுவரை வாழ்க்கையில் செட்டிலாகாத இளையபருவ மிதுனராசிக் காரர்களுக்கு இந்தக் காலகட்டம் மிகவும் முக்கியமான நன்மைகளையும், எதிர்காலத்திற்கான அஸ்திவாரங்களையும் உருவாக்கும் ஒரு காலகட்டம் என்பதால் இளைய பருவத்தினருக்கு வாழ்க்கையில் நிலை கொள்வதற்கான நல்ல சந்தர்ப்பங்கள் இந்த ராகுப்பெயர்ச்சியின் மூலம் உருவாகும். அவற்றை சிறியவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

ஏற்கனவே எந்த ஒரு விஷயத்திலும் காலூன்றி நிற்கமுடியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தற்போது நல்ல வாய்ப்புகள் கிடைத்து அவர்களும் தங்கள் துறைகளில் நிலைபெற முடியும். குறிப்பிட்ட சில மிதுன ராசிக்காரர்களின் செயல்திறன் நல்லவிதமாக வெளிப்பட்டு சாதனைகளும் செய்வார்கள்.

எனவே ராகுவைப் பொறுத்தவரையில் பதினெட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் சாதகமான வாய்ப்பு மிதுனராசிக்கு தற்போது வந்திருப்பதால் இந்த வாய்ப்பினை மிதுனராசிக்காரர்கள் நன்கு உபயோகப்படுத்திக் கொண்டு உங்கள் எதிர்காலத்தை வளம்பெறச் செய்து கொள்வீர்கள் என்பது உறுதி.

அதேநேரத்தில் வாழ்க்கையே எதிர்எதிர் நிலைகளை கொண்டதுதான் என்பது உங்களுக்கு தெரியும் என்பதால் ராகு நல்லநிலையில் இருக்கும் போது கேதுபகவான் அதற்கு எதிரான சாதகமற்ற நிலையில் இருப்பார் என்றாலும் தற்போது பத்தாமிடத்தில் இருந்து ஒன்பதாமிடத்திற்கு மாறும் கேதுபகவானால் உங்களுக்கு எவ்வித தொல்லைகளும் இருக்காது என்பதையும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

ஏனென்றால் தற்போதைய மாற்றத்தால் கேதுபகவான் மீனவீட்டிலிருந்து கும்பவீட்டிற்கு மாறுகிறார். கும்பமும், கன்னியும், விருச்சிகமும் கேதுவிற்கு மிகவும் பிடித்த வீடுகள் என்பதோடு கும்பகேது எவருக்கும் தொல்லைகளைத் தரமாட்டார் என்பதாலும் அதைவிட மிகப்பெரிய நிலையாக இந்த பெயர்ச்சியின் முதல் ஆறுமாதங்கள் கேதுபகவான் குருவின் சுபப்பார்வை பெறுவதாலும் ஒன்பதாமிடத்துக் கேது உங்களுக்கு நன்மைகளை மட்டுமே செய்வார்.

பொதுவாக ஒன்பதாமிடத்துக் கேதுபகவான் பாபத்துவம் அடைந்தால் தந்தையார் வழியில் கெடுபலன்களையும், தந்தைவழி உறவினர்கள் மூலம் வீண் விவகாரங்களையும், பூர்வீகச் சொத்துக்களை அனுபவிக்க முடியாத நிலைமையையும் அதிர்ஷ்டம் குறைகின்ற நிலைமைகளையும் தருவார்.

ஆனால் இம்முறை கும்பத்தில் குருவின் பார்வையில் இருக்கும் கேதுபகவான் இதுபோன்ற எவ்வித கெடுபலன்களையும் உங்களுக்கு தராமல் ஆன்மீக விஷயங்களில் உங்களுக்குச் சில நன்மைகளைச் செய்வார்.

குறிப்பிட்ட மிதுனராசிக்காரர்கள் சிலருக்கு கோவில் கட்டும் அமைப்பையும், இன்னும் சிலருக்கு ஏற்கனவே சிதிலம் அடைந்திருக்கும் பழமையான திருக்கோவில்களை சீரமைத்து புனருத்தானம் செய்யும் வாய்ப்பையும் இன்னும் சிலருக்கு ஆன்மீகத்தில் அதிகமான ஈடுபாட்டையும் வேறு சிலருக்கு ஆலயம் சம்பந்தப்பட்ட பதவிகளையும் அறங்காவலர் போன்ற பணிகளையும் கேதுபகவான் தருவார் என்பதால் இந்த ராகு-கேதுப்பெயர்ச்சி மிதுனராசிக்கு மிகவும் ஒரு நல்ல பெயர்ச்சியாக இருக்கும் என்பது உறுதி.

இதுவரை தள்ளிப்போய் இருந்த வெளிநாட்டு தொடர்பான வேலை விஷயங்களும் வெளிநாட்டு பயணங்களும் தற்போது வெற்றிகரமாக கை கூடி வரும். வாழ்க்கைத் துணைவர் விஷயத்தில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும்.

பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் இருக்கும் ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.

பெண்கள் நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் இப்போது நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். பட்டுச்சேலை முதல் பாதக்கொலுசு வரை வாங்குவீர்கள். கேட்டது கேட்ட இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள்.

உங்களின் அந்தஸ்து, கௌரவம், மேம்படுவதோடு வருமானம், பணப்புழக்கம் ஆகியவைகள் சரளமாகவும் முழுமையாக இருக்கும் என்பதால் மனமும் மகிழ்ச்சியாக இருக்கும். நான்குபேர் இருக்கும் இடத்தில் பளிச்சென தனித்து தெரிவீர்கள். எதையும் தன்னம்பிக்கையுடன் அணுகுவீர்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.

இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினருக்கு திருமணம் கூடி வரும். குழந்தை பிறக்காமல் தாமதமாகி வரும் தம்பதியினருக்கு உடனடியாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.

வழக்கு கோர்ட் காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அவை அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும்.

மூத்த சகோதரர்களிடம் நல்ல உறவும் நன்மைகளும் இருக்கும். சகோதர சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும். இதுவரை கருத்து வேற்றுமைகளாலும் குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள்..

கமிஷன் தரகு போன்றவைகளின் மூலமாக நல்ல பெரிய தொகை ஒரே நேரத்தில் ‘லம்ப்’பாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது செய்ய முடியும்.

மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும். மத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்லசெய்திகள் கிடைக்கும். வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.

சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. பெருநகரங்களில் இருப்பவர்கள் அருமையான ஒரு பிளாட் வாங்குவீர்கள். வாகனமாற்றம் உண்டு. இதுவரை வாங்க முடியாத நீங்கள் விரும்பிய வாகனம் இப்போது வாங்க முடியும். தாயராருக்கு இருந்துவந்த உடல்நலக்குறைவு சரியாகும்.

மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள். கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் பெரியவர்கள் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு.

விவசாயிகள் கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லபலன்களைத் தரும் நிலை வந்திருக்கிறது. இதுவரை சொன்னதை செய்து முடிக்க முடியாமல் இருந்த நிலை மாறி அனைத்தும் நல்லபடியாக நடக்கும் நேரம் இது.

மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்களுக்கு:

உங்களுக்கு மிகப்பெரிய லாபங்கள், பணவரவுகள் கிடைக்கும். வீடு வாகன விஷயங்களில் புதிய மாற்றங்கள் இருக்கும். சொந்த வீடு புதிய வாகனம் அமையும். மனைவியால் நன்மைகள் இருக்கும். இதுவரை அடுத்தவரை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள். தாயாரின் நன்மைகளுக்காக வரும் வருமானத்தில் செலவுகள் செய்வீர்கள். தாயாருக்காக ஏதேனும் வாங்கிக் கொடுப்பீர்கள். வரும் வருமானத்தை எதிர்காலத்திற்காக சேமிக்க முயற்சி செய்யுங்கள்.

திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு :

உங்களில் சிலருக்கு மாமியார் வீட்டில் இருந்து வாழ்க்கைத்துணையின் பங்காக ஏதேனும் ஒரு சொத்தோ, அல்லது நல்லதொகையோ சரியான சந்தர்ப்பத்தில் கிடைக்கும். ரியல்எஸ்டேட், வீடு கட்டிக் கொடுக்கும் புரமோட்டர்கள், சிகப்புநிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், செம்மண் பூமி, ஆறு, மலைப்பாங்கான இடங்களில் தொழில் வைத்திருப்பவர்கள் மேன்மைகளை அடைவீர்கள். சீருடை அணிந்து செயல்படும் துறையினருக்கு இதுவரை இருந்த அனைத்துப் பிரச்னைகளும் விலகி நிம்மதி இருக்கும்.

புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு:

எழுத்து சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்கள், அக்கவுண்டண்டுகள், கணிப்பொறித்துறையினர், செல்போன் போன்ற நூதன எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் விற்போர் குறிப்பாக காண்ட்ராக்டர்கள், நிர்வாகப்பணி சம்பந்தப்பட்டவர்கள், ஒரு துறைக்கோ அல்லது நிறுவனத்திற்கோ தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தந்தையின் தொழிலைச் செய்பவர்கள், நெருப்பு சம்பந்தப்பட்டவர்கள் போன்றோருக்கு இந்த ராகுகேதுப்பெயர்ச்சி அற்புதமான பலன்களைத் தரும்.

பரிகாரங்கள்:

ஏழை களுக்கும் முடியாமல் இருப்பவர்களுக்கும் சிறு உதவியாக இருந்தாலும் தேடிப்போய் உதவி செய்து அவர்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெறுங்கள். வயதானவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப் பட்டால் உதவுவுது , ஏழை மாணவருக்கு கல்வி உதவி , வசதிக்குறைவான குடும்பப் பெண்ணிற்கு திருமணத்திற்கு உதவுவது போன்றவைகளால் ராகு பகவானால் கிடைக்கும் நன்மைகளை இன்னும் பெருக்கிக் கொள்ள முடியும்.

No comments :

Post a Comment