Monday, March 22, 2021

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (22-03-2021 முதல் 28-03-2021 வரை)

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

மேஷம்;

ராசிநாதன் செவ்வாய் ராகுவுடன் இருந்தாலும் உச்ச சுக்கிரனின் வீட்டில் குருவின் பார்வையில் இருப்பது சிறப்பான அமைப்பு. தனாதிபதி சுக்கிரன் உச்ச வலுவாக இருப்பதும் மேஷத்தினருக்கு மகிழ்ச்சியைத் தரும் வாரமாக அமையும். உங்களில்  சிலரின் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க இருப்பதற்கான உறுதி நிகழ்ச்சிகள் நடைபெறும். சுக்கிரன் வலுப்பதால்  வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் அல்லது புது வீடு வாங்குதல் போன்றவைகள் உண்டு. கடன் பெற்று வீடு வாங்க முடியும். மேஷத்திற்கு இப்போது மிகவும் நல்ல நேரம்.

எதை வாங்கினாலும் வில்லங்கம் இருக்கிறதா என்று தீர விசாரியுங்கள். பத்தில் குரு, சனி சேர்ந்திருப்பதால் உங்களில் சிலர் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையில் இருப்பீர்கள். சிலருக்கு மறைமுக எதிர்ப்புகள் வலுவாகும். தொழில் மாற்றுவது சம்மந்தமான முயற்சிகளை சிலர் எடுப்பீர்கள். பணவரவிற்கு குறை இல்லை என்றாலும் சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழல்கள் இருக்கும். கணவன் மனைவி உறவில் முணுமுணுப்புக்கள் உண்டு. வார இறுதியில் புனித இடங்களுக்கு செல்வதோ, தெய்வ வழிபாடோ செய்வீர்கள்.

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் உச்ச நிலையில் வலுவுடன் இருப்பதால் ரிஷபத்திற்கு கெடுபலன்கள் சொல்ல முடியாத வாரம் இது. இளைஞர்கள் சிலருக்கு இந்த வாரம் வேலை, தொழில் விஷயங்களில் முக்கியமான மாறுதல்கள் ஏற்படும். மாத இறுதியில் நடைபெற இருக்கும் கிரக நிலைகள் மூலம் தொழில் அமைப்புகளில் நல்ல மாற்றங்கள் இருக்கும் என்பதால் வேலை, தொழில் இடங்களில்  நீங்கள் அக்கறையுடன் இருக்க வேண்டிய வாரம் இது. செவ்வாய், ராகு இணைவால் சிலருக்கு சகோதரர்களால் எதிர்மறையான பலன்கள் உண்டு.

ஏழுக்குடைய செவ்வாய் ராசியில் இருப்பதால் வாழ்க்கை துணைவர் விஷயத்தில் நன்மைகளும், லாபங்களும் இருக்கும். தந்தைவழி உறவினர்களால் நன்மைகளும், பூர்வீக சொத்து விஷயங்களில் இதுவரை இருந்து வந்த வில்லங்கங்களும், சண்டை, சச்சரவுகளும் விலகும். சிலருக்கு பிள்ளைகள் விஷயத்தில் சந்தோஷமான சமாச்சாரங்களும், நல்ல தகவல்களும் உண்டு. வீட்டில் பொன், பொருள் சேர்க்கை இருக்கும். கலைஞர்கள் பிரபலமாவதற்குரிய வாய்ப்புகள் வரும். சந்தோஷம் தரும் வாரம் இது.

மிதுனம்:

எட்டில் குரு, சனி இணைந்திருப்பது ஒருவகையில் மிதுன ராசிக்கு சாதகமற்ற அமைப்புத்தான் என்றாலும், சுக்கிரன் பத்தாம் வீட்டில் உச்ச வலுப்பெற்று இருப்பது கஷ்டங்களை விலக்கி வைக்கின்ற ஒரு நிலை. மிதுன ராசி இளைய பருவத்தினர் ஜாதகம் பார்க்க வருவது கூடிக்கொண்டே வருகிறது. குறிப்பாக உங்களில் திருவாதிரை  நட்சத்திரத்தினர் மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள். வேலை, தொழில் போன்றவைகளில் உங்களுக்குப் பிடிக்காத மாறுதல்கள் நடக்கும் வாரம் இது. எதிலும் நிதானம் காட்ட வேண்டும்.

சொந்தமாக தொழில் தொடங்கவோ, இருக்கும் தொழிலை விரிவுபடுத்தவோ இப்போது வேண்டாம். சிறிது தள்ளிப் போடுங்கள். சொந்த வாழ்க்கையில் ஏமாற்றத்தை சந்தித்து கொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு வாழ்க்கையே சிக்கலாகிப் போனது போலத் தெரியும். உங்களில் சிலர் ஏதேனும் ஒரு விஷயத்தில் குழப்பமாகி முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பீர்கள். சிலர் ஆடம்பர பொருள் வாங்கி பணத்தை விரையம் செய்வீர்கள். எவ்வளவு வருமானம் வந்தாலும் சேமிக்க முடியாது. யாரையும் நம்ப வேண்டாம்.

கடகம்:

ஏழில் அமர்ந்து ராசியைப் பார்க்கும் குரு, சனி சேர்க்கையால் உங்களின் பிடிவாத குணம் அதிகரிக்கும் வாரம் இது. வாரம் முழுவதும் குழப்பமாகவே இருப்பீர்கள். தகாத வார்த்தைகள் பேசுவீர்கள். சகாய ஸ்தானதிபதி புதன் எட்டில் வலுவாக இருப்பதாலும், பாக்கியஸ்தானத்தில் சுக்கிரன் உச்ச வலுப் பெற்றிருப்பதாலும் சிலருக்கு கேட்காமலேயே உதவிகள் கிடைக்கும். குறிப்பாக அந்நிய இன, மத, மொழிக்காரர்கள் மூலம் நன்மைகள் உண்டு. ஒரு சிலருக்கு அந்நிய மத மற்றும்  மொழி பேசும் நண்பர்கள் தக்க சமயத்தில் கை கொடுப்பார்கள்.

பதினொன்றாமிடம் பாப ஆதிக்கத்தில் இருப்பதால் சிலர் நெருங்கிய நண்பர்களிடம் தேவையற்ற சண்டையில் ஈடுபடுவீர்கள். மகன் மகள் விஷயத்தில் இருந்து வந்த மனக் கவலைகள் நீங்கும். இதுவரை எதிர்ப்புகளினால் தங்களின் உண்மையான திறமையை வெளிக் கொண்டு வர முடியாதவர்களும், திறமை இருந்தும் ஜெயிக்க முடியாதவர்களும் வெற்றிகளை பெறுவீர்கள். அம்மாவின் ஆதரவு உண்டு. மேற்படிப்பு படிப்பதற்கான முயற்சிகள் வெற்றி பெறும். சிலர் வெளியூர் பயணம் செல்வீர்கள். எதிலும் நிதானம் காட்டவேண்டிய வாரம் இது.

சிம்மம்:

வாரம் முழுவதும் பத்துக்குடைய சுக்கிரன் எட்டில் உச்சமாக இருப்பது சிம்ம ராசிக்கு ஓரளவு நன்மைகளைத் தரும் கிரக நிலைதான்.  சுக்கிரனே  மூன்றுக்கும்  அதிபதி என்பதால் தைரியத்தின் துணை கொண்டு நீங்கள் எதையும் எதிர்கொள்ளும் வாரம் இது. வேலை செய்யும் இடங்களில் உங்களை பிடிக்காதவர்களின் கை ஓங்கி இருக்கும் என்பதால் நிதானத்துடனும், கவனத்துடனும் நடந்து கொள்வீர்கள். தேவையற்ற விஷயங்களில் விரையங்கள் இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. பெண்களுக்காக வீண் செலவு செய்வீர்கள்.

குருவின் நீச்சபங்க வலுவால் விரோதிகள் உங்களை எதில் சிக்க வைக்கலாம் என்று அலைவார்கள். இளைய பருவத்தினர் சிலருக்கு எதிர்பால் இனத்தவர் மேல் ஈர்ப்பு உண்டாகும். சிலர் காதலிக்க ஆரம்பித்து எதிர்கால வாழ்க்கை துணைவரை அடையாளம் காண்பீர்கள். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு செப்டம்பர்  மாதத்திற்கு மேல் திருமணம் நடப்பதற்கான ஆரம்பங்கள் இப்போது உண்டு. உங்களில் சிலருக்கு சகோதர விஷயத்தில் மனவருத்தங்களும், இழப்புக்களும் நடைபெறும். ஆயினும் கெடுதலாக ஒன்றும் நடக்காது.

கன்னி:

ராசிக்கு ஐந்தில் குருவும், சனியும் இருப்பது கன்னிக்கு அதிர்ஷ்டத்தை செய்கின்ற அமைப்பு என்பதால் நன்மைகள் நடக்கின்ற வாரம் இது. கோடீஸ்வர யோகத்தை தரும் இரண்டு  கிரகங்களான கேதுவும், சனியும் மூன்று, ஐந்தாமிடத்தில்  உள்ளதால் இப்போது கன்னி ராசிக்கு மறைமுகமான வழிகளில் தனலாபம் கிடைக்கும். உங்களில் சிலருக்கு விருப்பமில்லாத வழிகளிலும், நேர்மையற்ற முறைகளிலும் நல்லவைகள் நடக்கும். குழந்தைகள் செலவு வைப்பார்கள். கன்னியினரின் யோக வாரம் இது.

கேது நன்றாக இருப்பதால் சிலர் ஆன்மீக விஷயத்தில் நாட்டம் கொள்வீர்கள். பக்தி இயக்கங்களில் ஈடுபாடு வரும். சிலர் புதிதாக சில கோவில்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து போவதற்கு ஆர்வம் கொள்வீர்கள். சிவ பக்தி மேன்மை தரும். முப்பது வயதுகளில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் அமைந்து நிரந்தர வருமானம் வரும். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும் குறிப்பாக அஸ்தம் நட்சத்திரக்கார்களுக்கு இது நல்ல வாரம்.

துலாம்:

துலாத்தினருக்கு இது நல்ல வாரம்தான். வேலை, தொழில் போன்றவைகளில் தடங்கல்களும் எதிர்மறை அனுபவங்களும் இருக்காது. சுக்கிரன் உச்ச பலம் பெறுவதால் வீடு, வாகனம், தாயார், கல்வி போன்ற விஷயங்களில் நல்ல பலன்கள் நடைபெறும். சிலருக்கு தாயார் வழி சொத்து போன்ற ஆதாயங்கள் உண்டு. தாய்வழியில் எல்லாவகையான ஆதரவுகளும் கிடைக்கும். ஆன்மபலம் கூடும். மிகவும் நம்பிக்கையாக இருப்பீர்கள். பிறந்த ஜாதகத்தின்படி நல்ல பலன்கள் நடக்காதவர்களுக்குக் கூட இந்த வாரம் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

ராசிநாதனின் உச்ச பலத்தால் துன்பங்களுக்கு இடமில்லை. வருமானம் சிறப்பாக இருக்கும். பணத்தை சேமித்து எதிலாவது முதலீடு செய்வீர்கள். தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரம் பெருகும்.  சுக்கிர வலுவால் இளைஞர்களின் எதிர்மறை பலன்கள் நீங்கி உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள். எதிர்கால வாழ்க்கை சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். திறமையை மட்டும் வைத்துத் தொழில் செய்பவர்கள் மற்றும் புத்திசாலித்தனத்தை முதலீடாக வைத்திருப்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள்.

விருச்சிகம்

ஜீவனாதிபதி சூரியன் குருவின் வீட்டில் நல்ல நிலையில் இருப்பதுடன் ஏழுக்குடைய சுக்கிரனும் உச்சமாக இருப்பது விருச்சிகத்திற்கு ஜீவன அமைப்புகளில் லாபம் தருகின்ற கிரக நிலைமைகள் என்பதால் நீங்கள் எதையும் சாதிக்கும் வாரம் இது. அந்தஸ்து, கவுரவம் உயர்கின்ற அமைப்பு இருப்பதால் சிலருக்கு பதவி உயர்வு அல்லது புதிதாக வேலை கிடைத்தல் போன்றவைகள் இருக்கும். தாமதமாகிக் கொண்டே வந்த மகன், மகள் திருமணத்தை நல்லபடியாக நடத்துவதற்கு. முன்னேற்பாடுகள் இந்த வாரம் உண்டு.

இதுவரை நிலுவையில் இருந்து உங்களை தொல்லைப் படுத்தி வந்த பிரச்னைகள் அனைத்தும் இனி சாதகமாக முடிவுக்கு வரும். நீண்ட நாட்களாக தலைவலியாக இருந்து கொண்டிருந்த விஷயங்கள் நல்லபடியாக தீர்ந்து நிம்மதியை தரும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். குறிப்பாக அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு கெடுதல்கள் எதுவும் இனிமேல்  நடப்பதற்கு  வாய்ப்பு இல்லை. கேட்டையினர் இனி நிஜமாகவே கோட்டை கட்டுவீர்கள்.

தனுசு:

ராசிநாதனின் நீச்ச பங்க வலுவால் தனுசுவினர் அனைத்திலும் வெற்றி காணும் வாரம் இது. அடியை மட்டுமே வாங்கிக் கொண்டிருந்த தமிழ் சினிமா கதாநாயகன் காதலியின் குரலைக் கேட்டதும் வீறு கொண்டு எழுந்து எதிரிகளை பந்தாடுவதைப்போல எதிலும் நீங்கள் உற்சாகம் காணும் நிலை வந்து விட்டது. எனவே கவலைகளை மூட்டை கட்டி மூலையில் வைக்க தயாராகலாம். வேதனைகள் விலக ஆரம்பித்து விட்டதால் இனிமேல் எதையும் நீங்கள் சமாளிப்பீர்கள்.

வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்த இளைய வயதினருக்கு நல்ல வேலை கிடைக்கும். சூரியன் வலுப் பெற்று, சுக்கிரனும் உச்சமாக உள்ளதால் தனம், வாக்கு, குடும்பம் ஆகிய மூன்று அமைப்புகளிலும் இப்போது நன்மைகள் இருக்கும். சொல்வது பலிக்கும். பண சிக்கல்கள் இருக்காது. 23-ம்தேதி மாலை 4.30 முதல் 25-ம் தேதி இரவு 10.48 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வெகுதூர பிரயாணங்களோ புதியமுயற்சிகளோ இந்த நாட்களில் செய்ய வேண்டாம். இந்த நாட்களில் எதையும் செய்யும் முன் ஒன்றுக்கு இரண்டாக யோசிப்பது நல்லது.

மகரம்:

மகரத்திற்கு தற்போது மாற்றங்களுக்கான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும். அந்த மாற்றங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையானதாக, நன்மைகளைத் தருவதாகவே இருக்கும். சந்தோசம் தரும் வாரம் இது. ராசிநாதன் ஜென்மச் சனி அமைப்பில் இருந்தாலும், சுப கிரகமான குருவுடன் இணைந்து, சுக்கிரனும் வலுவாக உள்ளதால் உங்களுக்கு நிதானமான நல்ல பலன்கள் நடக்கும் வாரம் இது. வாரத்தின் பிற்பகுதியில் தடைகள் நீங்கி சுறுசுறுப்பாக சாதிப்பீர்கள்.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அது வாங்குவதற்கான எண்ணங்கள் இருக்கும்.

ஆண்களுக்கு பெண்கள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். உறவுகளால்  வம்புகள் வரலாம் என்பதால் கவனமுடன் இருங்கள். மீடியா துறையினருக்கு அலைச்சல்கள் அதிகம் உண்டு. பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், பொருள் விற்பவர்கள் உயர்வு பெறுவீர்கள். 25-ம்தேதி இரவு 10.48 முதல் 28-ம்தேதி அதிகாலை 1.20 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வெகுதூர பிரயாணங்களோ புதியமுயற்சிகளோ இந்த நாட்களில் செய்ய வேண்டாம். இந்த நாட்களில் எதையும் செய்யும் முன் ஒன்றுக்கு இரண்டாக யோசிப்பது நல்லது.

கும்பம்:

யோகாதிபதி சுக்கிரன் உச்சமாக இருப்பதால் கும்ப ராசிக்காரர்களின் மனம் இந்த வாரம் புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இருக்கும். பிறந்த ஜாதகப்படி சனி  தசை அல்லது சனி புக்தி நடந்து கொண்டிருப்பவர்கள் உங்கள் எதிர்காலத்தை பற்றிய அமைப்புகளில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பீர்கள். கும்ப  ராசிக்காரர்களுக்கு இதுவரை தடையாகி வந்த அனைத்து விஷயங்களும் கைகூடி வரும் வாரம் இது. இந்த வாரம் நீங்கள் ஆரம்பிக்கும் ஒரு புதிய அமைப்பினால் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்மைகள் நடக்கும்.

வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை அடைவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் உண்டு. உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். சிலருக்கு அலைச்சல்களும் சரியான வேளையில் சாப்பிட முடியாத நிலையும் இருக்கும். 28-ம்தேதி அதிகாலை 1.20 முதல் 30-ம்தேதி அதிகாலை 1.42 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வெகுதூர பிரயாணங்களோ புதியமுயற்சிகளோ இந்த நாட்களில் செய்ய வேண்டாம். இந்த நாட்களில் எதையும் செய்யும் முன் ஒன்றுக்கு இரண்டாக யோசிப்பது நல்லது.

மீனம்:

ஆறு, எட்டுக்குடைய சுக்கிரனும், சூரியனும் ராசியில் வலுவாக இருப்பது மீனத்திற்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத ஒரு நிலையைத் தரும். அதேநேரத்தில் ராசிநாதன்  குரு நீச்சபங்க வலுவில் இருப்பதால் எதுவும் எல்லை மீறி போகாது. மீனத்தினர் சாதிக்கும் வாரம் இது. சிலருக்கு தள்ளிப்போய் கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தும் இப்போது நிறைவேறும். உங்களில் உத்திராட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வீட்டுமனையோ, கட்டிய வீடோ, வாங்குவதற்கு யோகம் இருக்கிறது. எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு இது நல்லவாரம். புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவுபடுத்தலாம். கிளைகள் ஆரம்பிக்கலாம். வீட்டிற்குப் பயந்து காதலை மனதிற்குள் பூட்டி ஒளித்து வைத்திருந்தவர்கள் தைரியம் வந்து பெற்றோரிடம் சொல்லி அவர்களின் சம்மதத்தையும் பெறுவீர்கள். செலவு விஷயத்தில் சற்று கவனமுடன் இருக்க வேண்டும். பண வரவுகள் தடைபடாது. வேற்று மதத்தினர் உதவுவார்கள். சுய தொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். கிராமப்புற விவசாயிகளுக்கு நன்மை உண்டு.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 ,+91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment