Saturday, February 16, 2019

வர்க்கோத்தமம் என்றால் என்ன?...D-046


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

ஒரு கிரகம் ராசிச் சக்கரத்தில் எத்தகைய வலுவில் இருக்கிறது என்பதைக் கணிக்கப் பயன்படும்,
ஷட்பலம் எனப்படும் ஆறுவித கணித முறைகளை டுத்து, நவாம்சத்தில் அது என்ன நிலையில் இருக்கிறது என்பதை அறிய உணரும் நிலை வர்கோத்தமம் எனப்படுகிறது.

வர்க்க உத்தமம் எனப்படுவதே இணைந்து, வர்க்கோத்தமம் என்ற சொல்லானது. நவாம்சம் உள்ளிட்ட அனைத்து வர்க்க சக்கரங்களிலும் ஒரே இடத்தில் இருக்கும் ஒரு கிரகம் நன்மைகளைத் தரும் என்பதே வர்கோத்தமத்தின் அடிப்படை. ஆயினும் இது சுபத்துவ, பாபத்துவ நிலைகளுக்குக் கட்டுப்பட்டது.

வர்க்கச் சக்கரங்கள் என்பது கணித ரீதியாக ராசிச் சக்கரத்தை பிரித்து, அதில் கிரகங்கள் இருக்கும் நிலையை வைத்து, பலன் அறிய முடியுமா என்று. நம்முடைய ஜோதிட முன்னோர்கள் செய்த ஒரு முயற்சி. ஆயினும்,
 வர்க்கச் சக்கரங்களின்படி, அதாவது, வர்கோத்தம அமைப்பை மட்டும் வைத்து பலன் சொல்வது சரியாக வரவில்லை.

வர்க்கோத்தம நிலைக்கு ஒரு. நல்ல உதாரணமாக, மேஷம். சிம்மம், தனுசு ஆகிய வீடுகளின், முதல் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகியவற்றின், முதல் பாதத்தில் அமரும் கிரகங்கள் வர்க்கச் சக்கரங்களில் அதே இடங்களில், மிக உயர் வர்க்கோத்தம நிலையில் இருக்கும்.

இந்த நிலையில் ராசியில் அது ஸ்தான பலம் இழந்திருந்தாலும், அதாவது நீச்சம், பகை போன்ற அமைப்புகளை அடைந்திருந்தாலும் கூட, வர்கோத்தம நிலையில் இருக்கும் பொழுது அது பலம் இழக்காது என்று மூல நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

மேலே நான் சொன்ன அஸ்வினி, மகம், மூல நட்சத்திரங்கள் அடங்கிய மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகளில் மேஷம் தவிர்த்த சிம்மம், தனுசு வீடுகளில் எந்தக் கிரகமும் நீச்ச நிலையை அடைவதில்லை. மேஷத்தில் மட்டும் சனி நீச்சம் பெறுவார்.  மேஷத்தில் சனி நீச்சம் அடையும் நிலையிலும், அஸ்வினி முதல் பாதத்தில் வர்கோத்தமம் அடைந்திருப்பின் வர்க்கச் சக்கரங்கள் அனைத்திலும் அவர் அதே மேஷ ராசியில் அமர்ந்து உயர்நிலை பெறுவார்.

இதுபோன்ற அமைப்பில், ராசிக்கட்டத்தில் சனி சுபத்துவ, சூட்சும வலுவோடு அமர்ந்து, லக்னப்படி நல்ல ஆதிபத்தியமும் பெறுவாராயின் சனியின் நீச்சநிலை ஜாதகருக்கு மிகுந்த நற்பலனைத் தரும். இங்கே நீச்சம் பெறும் சனி காரக வலிமை இப்பதில்லை. ஆனால், இங்கே சனி சுபத்துவம் மற்றும் சூட்சுமவலுவினை அடைந்திருந்தால் மட்டுமே தனது தசையில் மிகப்பெரும் பொருள் வரவை ஜாதகருக்கு கொடுப்பார்.  

இந்த இடத்தில் ஒரு கிரகத்தின் சுபத்துவ, சூட்சும வலு மட்டுமே முக்கியமே தவிர, வெறும் வர்கோத்தம நிலையை மட்டும் அடைந்திருக்கின்ற கிரகம் எந்த நன்மையையும் தந்து விடுவதில்லை. வர்கோத்தம நிலை என்பது, அந்தக் கிரகம், தன்னுடைய ஆதிபத்திய, காரகத்துவத்தை தரும் நிலையில் இருப்பதாகவே, நாம் பொருள் கொள்ள வேண்டும். உண்மையில் வர்கோத்தம நிலையில் “மட்டும்” ஒரு கிரகம் “சுப” பலன் தருவதில்லை.

2011 ல் நான் எழுதிய பாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும் எனும் கட்டுரையில், உயர்நிலை பணக்காரர் ஒருவருக்கு இந்த அஸ்வினி ஒன்றாம் பாதத்தில் சனி நீச்ச நிலையில் இருந்து, சிம்மத்தில் இருக்கும் குருவின் பார்வையை பெற்றிருப்பதாலும், சனி நேர்வலு இழந்து திக்பலம் எனும் சூட்சும வலுவினைப் பெற்றிருப்பதாலும் இவர் சனியின் தொழில்களில் மிக உயர் நிலையை அடைவார் என்று எழுதியிருந்தேன்.

ராகு,

 சனி,

 

 

 

 

31-7-1968    

சூரி, புத, சுக்,செவ்

 

 குரு

 

 

 

 ல/

சந், கே

மேலே உள்ள இந்த மெகா கோடீசுவரரின் ஜாதகத்தில் சனி, செவ்வாய், குரு ஆகிய மூன்று கிரகங்கள் வர்க்கோத்தமம் அடைந்துள்ளன. அதேநேரத்தில் இவருக்கு, மகா தனயோகம் எனும், 2, 9, 11 க்குடையவர்களுடைய சேர்க்கை, மிகுந்த சுபத்துவமாக தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் அமைந்து, லக்னாதிபதியும் மிக உயர்நிலை அமைப்பில் இருக்கிறார்.

தற்போது இவருக்கு சனி தசை நடந்து கொண்டிருக்கிறது. சனியின் நீச்சத் தொழிலான மதுபானத் துறையில் கடந்த எட்டு ஆண்டுகளில் இவரது வளர்ச்சி அபாரமாக உயர்ந்து, இன்றைக்கு மதுத்துறையில் இவர் முதலிடத்தில் இருக்கிறார்.

குடிக்கக்கூடாத அல்லது குடிக்க இயலாத மது, ஆசிட் போன்ற திரவங்கள் சனியின் காரகத்துவங்களில் அடங்கும். சனி இவருக்கு மதுவின் மூலம் பெரும் பொருள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த மிகப்பெரும் செல்வந்தருக்கு துலாம் லக்னமாகி, லக்ன ராஜயோகரான சனி, எனது பாபக் கிரகங்களின் சூட்சுமவலுக் கோட்பாட்டின்படி ஆட்சி, உச்சம் எனும் நேர்வலு இழந்து, திக்பலம் எனப்படும் சூட்சுமவலுவினை பெற்று, வர்கோத்தம நிலையில், அதிநட்பு ஸ்தானத்தில் இருக்கும் மிகுந்த ஒளிபொருந்திய குருவின் பார்வை பெற்று சுபத்துவமும் ஆகியிருக்கிறார்.

சனி, குரு இருவரும் வேறு கிரகங்களுடன் இணையாமல் தனித்திருக்கும் நிலையில், சுபத்துவ, சூட்சும வலுப்பெற்ற சனியின் தசை ஆரம்பித்ததும் இவருக்கு மதுபானத்துறை தொடர்புகள் உண்டாகி இன்றைக்கு இத்துறையில் இந்திய அளவில் சொல்லக் கூடிய நிலையில் இருக்கிறார். இந்த நிலைக்கு சனியின் சுபத்துவ, சூட்சும வலுக்களே முதன்மைக் காரணம். அதன்பின் வர்க்கோத்தமத்தைச் சொல்லலாம்.

ஜாதகத்தில் வெறும் வர்க்கோத்தம நிலை மட்டும் பெற்ற கிரகங்களைக்  கொண்டிருப்பவர்கள், அதனுடைய தசையில், உயர்நிலையை அடைந்து விடுவது இல்லை. வர்க்கோத்தமம் என்பது ஒரு துணை அமைப்பாக மட்டுமே செயல்படுகிறது. வர்க்க சக்கரங்களை மட்டும் வைத்து பலன் அறிய முடியாது என்பதே உண்மை. வர்க்க சக்கரங்கள், ஒரு கிரகம் இருக்கின்ற இடத்தை. கணித ரீதியாக. அளவிட உதவி செய்கிறது என்றே சொல்லிவிடலாம். ஆனால், சுபத்துவ, பாபத்துவ, சூட்சும வலு நிலைகளை வைத்து துல்லியமாக பலன் சொல்ல முடியும்.

இவரது ஜாதகத்தில் ஜீவனாதிபதியான சந்திரன் வளர்பிறை நிலையில், பனிரெண்டில் அமர்ந்து, புதனுடன் பரிவர்த்தனையாகி, கேதுவுடன் இணைந்திருப்பதால் இவர் குரு தசையில் பனிரெண்டாம் பாவகத்திற்குரிய தொழிலையும், சனிதசையில் திரவத் தொழிலையும் செய்வார் என அவரது இளம் வயதிலேயே கணித்துச் சொல்லியிருந்தேன்.

மேலே நான் உதாரணமாகக் காட்டியிருக்கும் மெகா கோடீசுவரர் சனிக்கு முந்தைய குருவின் தசையில் நூற்றுக்கணக்கான கோடிகளை மிகச் சுலபமான ஒரு துறையில் சில ஆண்டுகளில் சம்பாதித்தார். இதற்கு தன காரகனான குரு, எவ்வித பங்கமும் அடையாமல் தனக்கு மிகவும் பிடித்த அதிநட்பு வீடான சிம்மத்தில் பதினொன்றாம் இடத்தில் அமர்ந்து இருந்ததே காரணம்.

பெரும்பாலான நிலைகளில் துலாம் லக்னத்திற்கு குரு தசை வரக்கூடாது என நான் எழுதுகிறேன். அதேநேரத்தில் விதிகளை விட விதிவிலக்குகளே அதிகம்  கவனிக்கப்பட வேண்டும் என்றும் சொல்லுகிறேன்.

அதன்படி இந்த மெகா கோடீஸ்வரரின் துலாம் லக்னத்திற்கு மிகப்பெரிய தீமைகளைச் செய்யக்கூடிய கொடிய பாவியான குரு, கெடுதல்களைச் செய்யும் தனது ஆதிபத்தியமான ஆறாம் பாவத்திற்கு ஆறில் மறைந்து, பதினொன்றாம் வீட்டில் அமர்ந்து, ஆறாம் பாவகத்தின் தீமைகளைச் செய்ய இயலாமல் வலிமை இழந்து, தனது அதிநட்பு வீடான சிம்மத்தில் அமர்ந்திருப்பதால், தனது தசை முழுவதும் தனது காரகத்துவமான மிகப் பெரிய பொருள் வரவையும், இளம் வயதிலேயே திருமணத்தின் மூலம் குழந்தை பாக்கியங்களையும் கொடுத்தார். இங்கே குருவின் வர்க்கோத்தமம் என்பது இரண்டாம் நிலை அமைப்புத்தான்.

ஒரு கிரகம் நல்ல நிலையில் இருக்கும்பொழுது, தனது தசையில் தனது உயிர்க் காரகத்துவத்தை கொடுத்த பின்பே, ஜடக் காரகத்துவத்தை தரும் என்பதன் அடிப்படையில் இவருக்கு மிக இளம் வயதில் திருமணமாகி, அடுத்த ஒரு வருடத்திலேயே குழந்தை பிறந்து, தந்தை என்ற நிலையை அடைந்த பிறகு, குரு தசை மிகப் பெரும் பொருள் வரவைக் கொடுத்தது.

வர்கோத்தமம் என்பது கணித ரீதியாக, ராசிக் கட்டத்தில் அது எத்தகைய துல்லிய இடத்தில் இருக்கும் என்பதை அறியச் செய்யும் ஒரு முயற்சி. அதை மட்டும் வைத்து பலன் சொல்லிவிட முடியாது. மற்றபடி வர்க்கோத்தமம் அடைந்திருந்தாலும் கூட, அந்தக்  கிரகம் இருக்கும் சுபத்துவ, பாபத்துவ, சூட்சும வலு அமைப்புகளே அந்த கிரகத்தின் நல்ல, கெட்ட பலன்களை நிர்ணயிக்கின்றன என்பதை புரிந்து கொள்வது நல்லது.

அதேநேரத்தில் வர்க்கோத்தம நிலையை வைத்துத்தான், அதன் மூலமாகத்தான், நவாம்சத்தில் ஒரு கிரகம் சுபர் வீடுகளில் இருக்கிறதா (சுபத்துவம்), அல்லது பாபர் வீடுகளில் இருக்கிறதா (பாபத்துவம்), அதாவது சுப வர்க்கம் பெற்றிருக்கிறதா? பாப வர்க்கம் பெற்றிருக்கிறதா என்பதைக் கணிக்க முடியும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் - செல்:8681998888, 8870998888, 8428998888, 7092778888, 8754008888, 044-24358888, 044-48678888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

1 comment :

  1. எத்தகைய ஒரு பலவீனமான நிலையிலும், ஒரு கிரகத்தின் தாழ்வு நிலையை நீக்கி, அக்கிரகத்தை முழுமையாகத் தூக்கி நிறுத்தும் வலிமை சந்திரனுக்கு உண்டு... ////

    GREAT PLANET MOON 🌙 GURUJI.

    ReplyDelete