Saturday, February 16, 2019

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (18.02.19 முதல் 24.02.19 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மேஷம்: 

வாரம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி வலுவுடன் இருப்பதால் மேஷத்திற்கு நன்மைகள் மட்டுமே நடக்கும் வாரமாக இது இருக்கும். வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும். சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் உள்ளதால் சினிமா, டிவி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தை எதிர்கால முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

இதுவரை வீடு வாங்க தடை இருந்தவர்களுக்கு தடை நீங்கி நல்ல வசதியான வீடு அமைய போகிறது. வாடகை வீட்டில் இருப்பவர்கள் இனிமேல் குத்தகை அடிப்படை வீட்டிற்காவது மாற முடியும். சிக்கலில் இருந்த தொழில் வியாபாரம் போன்றவைகள் மீண்டும் எழுச்சியுடன் நடைபெறப்போகும் காலம் வந்து விட்டது. பெண்கள் சம்பந்தப்பட்ட மங்கள நிகழ்ச்சிகளால் சிலர் சகோதரிகளுக்கோ, மகள்களுக்கோ, பேத்திகளுக்கோ கடன் வாங்கி செலவு செய்ய வேண்டி இருக்கும். 

ரிஷபம்: 

இந்த வாரம் தொழில் விஷயத்தில் ரிஷபத்திற்குச் சங்கடங்கள் இருந்தாலும் முடிவில் அனைத்தும் சாதகமாகவே முடியும். எனவே வேலை தொழில் வியாபாரம் போன்றவைகளில் சிக்கல்கள் எதுவும் இருக்கப் போவது இல்லை, ஆனால் ரிஷபத்தினர் இப்போது எவரையும் நம்பி ஜாமீன் போடுவதோ, யாருக்கும் வாக்கு கொடுப்பதோ கூடாது. போட்டிபந்தயங்கள், லாட்டரிச்சீட்டு, ரேஸ் போன்றவை இப்போது கை கொடுக்காது. எதிலும் பேராசைப்படாமல் இருப்பது நல்லது. 

நெருங்கியவர்களே எதிராகத் திரும்ப வாய்ப்பு இருப்பதால் அனைத்திலும் நிதானமாக இருங்கள். உறவினர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள், சிறு சண்டைகள் வரலாம். வீடு, வாகன, தாயார் விஷயத்தில் செலவுகள் இருக்கும். தாயாருக்கு ஏதேனும் வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பப் பிரச்னைகளை விவேகத்துடன் கையாள்வது நல்லது. எங்கும், எதிலும் கோபப்பட்டு பேச வேண்டாம். வீண் செலவுகளும் விரயங்களும் இருக்கும். குரு ராசியைப் பார்ப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். 

மிதுனம்: 

ஏழாமிடத்தில் சனி அமர்ந்து ராசியை பார்ப்பதால் சில மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கைத் துணைவரிடம் வாக்குவாதங்களும், கருத்து வேறுபாடுகளும், கசப்பான அனுபவங்களும் இருக்கும். யோகாதிபதி சுக்கிரன் அவருடன் இணைந்திருப்பதால் இறுதியில் எல்லா விஷயங்களும் நிறைவாக முடியும். வலுப்பெற்ற செவ்வாய் இரண்டாமிடத்தைப் பார்ப்பதால் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு. தந்தைவழியில் ஆதரவு உண்டு. 

ஆறில் குரு இருப்பதால் கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக இருப்பது நல்லது. மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் போன்றவர்கள் எதையும் நிதானமுடன் அணுக வேண்டும். நட்புக் கிரகங்கள் வலுவுடன் இருப்பதால் எது வந்தாலும் சமாளிப்பீர்கள். புத்திசாலியான மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சோதனைகள் எதுவும் இல்லை. கலைத்துறையினருக்கு இது சிறப்பான வாரம். சிலர் புகழ் அடையும்படியான சம்பவங்கள் நடக்கும். பெண்கள் உதவுவார்கள். 

கடகம்: 

வார ஆரம்ப நாட்களில் ராசிநாதன் சந்திரன் வலுப் பெறுவதால் இந்த வாரம் கடகத்திற்கு இனிமையாகவே அமையும். சென்ற சிலவாரங்களாக உங்களுக்கு எந்த விஷயங்களில் பிரச்னைகள் இருந்து வந்ததோ அவை அனைத்தும் உங்கள் மனம் போலவே தீர்ந்து நன்மைகள் நடக்கும். சிலருக்கு ஆலயப் பணிகளில் ஈடுபாடு வரும். திருக்கோயில்களைச் சுற்றித் தொழில் புரிபவர்கள் மேன்மை அடைவீர்கள். பெண்களுக்கு அருமையான வாய்ப்புகள் கிடைக்கும் வாரம் இது. 

உங்களில் சிலருக்கு தலைமைப் பொறுப்பு கிடைக்கும். மற்றவர்களை வழி நடத்துவீர்கள். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். தோல்வி மனப்பான்மையை உதறித் தள்ளி வெற்றியைத் தரும் வேலைகளை முனைப்புடன் செய்ய வேண்டிய வாரம் இது. ஜென்ம ராசியில் இருக்கும் ராகு இன்னும் நான்கு வாரத்தில் மாறப் போவதால் இதுவரை சில விஷயங்களில் சோம்பலாக இருந்தவர்கள் அதை விடுத்து சுறுசுறுப்பாக மாறுவீர்கள் கடகத்திற்கு மேன்மைகளைத் தரும் வாரம் இது. 

சிம்மம்: 

சிம்மராசிக்கு கெடுதல்கள் எதுவும் இல்லாமல் நன்மைகள் மட்டுமே நடக்கும் வாரம் இது. ஏழாம் அதிபதி சனி, சுக்கிரனுடன் ஐந்தில் இணைந்திருப்பதால் இளைய பருவத்தினர் சிலருக்கு காதல் வரும். அந்தக் காதல் கைகூடவும் செய்யும். குறிப்பிட்ட ஒரு பலனாக பணவரவு இருந்தாலும் வருமானத்தைச் சேமிக்க முடியாமல் வீண்செலவு செய்ய வேண்டி இருக்கும். புதிய முயற்சிகளையும் தொலை தூர பிரயாணங்களையும் இந்த வாரம் தவிர்க்கவும். சிலருக்கு இதுவரை வராமல் இழுத்தடித்த பணம் வந்து சேரும். 

தந்தை வழி உறவினர்களிடம் பிரச்னைகள் வரலாம். சிலருக்கு பெண்களால் லாபம் உண்டு. ராசிநாதன் சூரியன் ராசியைப் பார்ப்பதால் அந்தஸ்து, கௌரவம் பழுதுபடாது. எண்ணங்கள் செயலாகி நினைத்தது நடக்கும். சொன்னது பலிக்கும். எட்டாமிடம் வலுப்பெறுவதால் உங்களில் சிலருக்கு உயரமான இடங்களுக்கு போகும் அமைப்பு உண்டாகும். மலையும் மலைசார்ந்த இடங்களில் சுரங்கம் கிரஷர் ஜல்லி கிரானைட் போன்ற தொழில் வைத்திருப்பவர்களுக்கும், வேலை செய்பவர்களுக்கும் நன்மைகளைத் தரும் விஷயங்கள் நடக்கும். 

கன்னி: 

ராசிநாதன் புதன் நீசனாக இருந்தாலும் குருவின் பார்வையில் இருக்கிறார் என்பதால் கன்னிக்கு இந்த வாரம் எல்லா விஷயங்களும் கொஞ்சம் இழுபறியாக இருந்தாலும் இறுதியில் நன்மையாகவே முடியும். உங்களில் வயதானவர்கள் மற்றும் நடுத்தர வயதை தாண்டியவர்கள் மற்றும் சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது பரிசோதனை செய்து கொள்வது நல்லது. முக்கியமாக கண்சோதனை செய்து கொள்ளுங்கள். உடல்நலத்திலும், உயரமான இடங்களுக்கு செல்லும் போதும் கவனம் தேவை. 

தனியார்துறை மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படும். திடீரென நிர்வாகம் கண்காணிப்பு வேலைகளில் ஈடுபடவோ, அது சம்பந்தப்பட்ட கருவிகளைப் பொருத்தவோ, வாய்ப்புள்ளது. சொந்தத் தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவை மட்டும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான வாரம்தான். சுயதொழிலர்களுக்கு உற்பத்தி ஆர்டர்கள் சீராகக் கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். பணவரவு தடைப்படாது. 

துலாம்: 

வாக்கு ஸ்தானாதிபதியான செவ்வாய் ஏழாம் வீட்டில் ஆட்சி நிலையில், வலுவாக இருப்பதால் இந்த வாரம் நீங்கள் மனமுவந்து சொல்லும் வார்த்தைகள் பலிக்கும். துலாம் ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையுடன் செயலாற்றும் வாரம் இது. சிலர் எதையும் பேசி ஜெயிப்பீர்கள். சிலருக்கு பொன்பொருள் சேர்க்கை உண்டு. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகம் இருக்கும். 

வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. சொந்தத்தொழில் செய்பவர்கள் தொழில் விரிவாக்கத்தினை நல்லமுறையில் செய்யலாம். பெண்களுக்கு இது நல்ல வாரம்தான். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள். வேலை செய்யும் இடங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது. வீட்டிலும் உங்கள் பேச்சை கணவரும் பிள்ளைகளும் கேட்பார்கள். குடும்பத்தில் சுப காரியங்களை மிகச் சிறப்பாக நடத்துவீர்கள். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பணியிடங்களில் மகிழ்ச்சியும் மரியாதையும் நிச்சயம் உண்டு. 

விருச்சிகம்: 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சோதனைகள் முடிந்து விட்டது. இனிமேல் சனியின் தொந்தரவுகள் உங்களுக்கு இருக்காது. உங்கள் பிரச்னைகள் அத்தனையும் தீர்ந்து கொண்டிருக்கிறது. இனிமேல் நன்றாக இருப்பீர்கள். உங்களில் பெரும்பாலானோர் ஒளி பிறப்பதை உணர ஆரம்பித்து விட்டீர்கள். இன்னும் வழி காணாத மிகச் சிலருக்கும் வரும் வாரங்களில் துன்ப மேகங்கள் விலகும். ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக இருப்பதால் இதுவரை இதைச் செய்யலாமா, அதைச் செய்யலாமா என்று தயங்கிக் கொண்டிருந்தவர்கள் துணிச்சலுடன் செயலாற்றுவீர்கள். 

கிரகநிலைகள் சாதகமாக திரும்புவதால் உங்களுடைய மனதைரியமும், செயல் திறனும் கூடுதலாகும். அலுவலகத்தில் சாதகமான மாற்றங்கள் இருக்கும். நீண்ட நாட்களாக குலதெய்வ வழிபாடு நடத்தாதவர்கள் உடனடியாக குலதெய்வத்தை தரிசனம் செய்யுங்கள். எத்தனை இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலும் குலதெய்வத்திற்கு மிஞ்சிய சக்தி இல்லை. உங்களில் வயதானவர்களுக்கு மகன் மகள்களால் இதுவரை இருந்து வந்த மனச்சங்கடங்கள் விலகி அவர்களால் இனிமேல் சந்தோஷம் இருக்கும். 

தனுசு: 

இளம் வயது தனுசுவினர் இந்த வாரம் மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பதைப் போல தொழிலிலும், வீட்டிலும் ஒரு விஷயத்தின் நடுவில் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்படுவீர்கள். சிலர் வீட்டில் மனைவி, அம்மாவிற்கு நடுவிலும் அலுவலகத்தில் முதலாளிக்கும் மேனேஜருக்கும் நடுவிலும் மாட்டிக் கொண்டு தலையைப் பிய்த்துக் கொள்வீர்கள். 30 வயதுகளில் இருப்பவர்களின் எதிர்காலம் பற்றிய மாற்றங்கள் தொடங்கும் வாரம் இது. இந்த மாற்றங்கள் தேவை என்பதால் குறைப்பட்டுக் கொள்ள எதுவும் இல்லை. 

என்னதான் சோதனைகள் இருந்தாலும் ஓரளவிற்கு பணப்புழக்கம் கையில் இருக்கும். வருமானம் வருவதால் கொடுக்கும் வாக்கைக் காப்பாற்ற முடியும். உங்களில் சிலருக்கு வீடு வாங்குவதற்கு இருந்த தடைகள் நீங்கி கட்டிய வீடோ அல்லது காலிமனையோ, வாங்க ஆரம்பங்கள் இருக்கும். 17-ம் தேதி காலை 11.23 முதல் 19-ம் தேதி காலை 11.03 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் மேற்கண்ட நாட்களில் செய்ய வேண்டாம். 

மகரம்: 

மகர ராசிக்காரர்களுக்கு எந்தக் காரியமும் தடைபடாமல் நிறைவேறும் வாரம் இது. வார பிற்பகுதியில்தான் நல்லபலன்கள் நடக்கும். சிலருக்கு தொழில் பிரச்னைகள் இருந்தாலும் பணவரவிற்கு குறை இருக்காது. எதையும் சமாளித்து விடுவீர்கள். ராசிநாதன் சனி பனிரெண்டாமிடத்தில் சுக்கிரனுடன் இணைந்து சுபத்துவம் பெறுவதால் அனைத்திலும் எதிர்பாராத வெற்றியும், சிலருக்கு மறைமுக தனலாபமும் இப்போது உண்டு. பிறந்த இடத்திலிருந்து தூரத்தில் இருப்பவர்கள் நன்மைகளை அடையப் பெறுவீர்கள். 

வேலைக்காக வெளியூர் சென்றவர்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும். எதிரிகள் பின்னால் குழி பறிப்பார்கள் என்பதால் பேசும் போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு சந்தோஷ நிகழ்ச்சிகள் உண்டு. 19-ம் தேதி காலை 11.03 முதல் 21-ம் தேதி காலை 10.22 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்களில் மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் வாழ்க்கையை பாதிக்கும் முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். 

கும்பம்: 

கும்ப ராசிக்காரர்களுக்கு வருமானம் கிடைக்கும் வாரம் இது. உங்களில் சிலருக்கு எடுக்கும் முயற்சிகள் யாவும் பரம்பொருளின் அருளினால் சுலபமாக முடிந்து நன்மைகளும், லாபங்களும் உண்டு. வெளிநாட்டு பனிரெண்டாம் அதிபதி சனி குருவின் வீட்டில் சுக்கிரனுடன் இணைந்து சுபத்துவமாக இருப்பதால் வேலைக்காக விசா எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு இந்தவாரம் நல்லவை நடக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள். 

கலைஞர்களுக்கு இது நல்லவாரம். பெண்களுக்கு அலுவலகங்களில் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். இதுவரை நடந்து வந்த எதிர்மறை பலன்கள் இனிமேல் இருக்காது. நாளை நீங்கள் நன்றாக இருக்கப் போவதற்கான வழிமுறைகள் இப்போதே ஆரம்பிக்கத் துவங்கும். 21-ம் தேதி காலை 10.22 முதல் 23-ம் தேதி காலை 11.27 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் எந்த ஒரு ஆரம்பங்களையும் செய்ய வேண்டாம். புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தி கொள்வது போன்ற விஷயங்களை இந்த நாட்களில் தள்ளி வைக்கவும். 

மீனம்: 

மீனராசிக்கு இந்த வாரம் கிரகங்கள் நன்மை செய்யும் அமைப்பில் இருப்பதால் இந்த சாதகமான நேரத்தில் இளைய பருவத்தினர் தங்களது எதிர்காலத்தை பற்றிய திட்டமிடலையும் அதற்கான அடிப்படைகளையும் அமைத்துக் கொள்ளுவது நல்லது. சுமைகள் எதையும் கொடுக்காத வாரம் இது. கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காமலும், முயற்சி செய்தும் காரியம் கைகூடாமலும், கொஞ்சம் கூட அதிர்ஷ்டம் ஒத்துழைக்காமலும் இருந்த மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்களை தரும் வாரம் இது. 

உங்களில் சிலருக்கு பங்குச்சந்தை, சூதாட்டம் போன்றவைகளில் ஓரளவு வருமானம் வரும். இரண்டில் ஆட்சி பெற்ற செவ்வாய் சோதனைகளை தடுத்து நிறுத்தி பாதுகாப்பார். எதிலும் முட்டுக்கட்டைகளை சந்தித்தவர்களுக்கு நல்வழி பிறக்கும். 23-ம் தேதி காலை 11.27 முதல் 25-ம் தேதி மாலை 4.01 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாமல் சற்று எரிச்சலான ஒரு நிலையில் இருப்பீர்கள் என்பதால் அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது. 

No comments :

Post a Comment