கன்னி :
மாத ஆரம்பத்தில் கன்னிநாதன் புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார். புதன் இருப்பது
அவரது எதிரியான செவ்வாயின் வீடு. ராசியின் எதிரியான செவ்வாய் எட்டாமிடத்திற்கு
அதிபதியாகி ஐந்தில் உச்சமாக இருப்பதால் இந்த மாதம் உங்களில் சிலருக்கு
பிடிக்காத விஷயங்களில் இருந்து பணவரவு இருக்கும். குறிப்பிட்டு சொல்லும்படியான
ஒரு பலனாக பணத்தின் காரணமாக பிரிந்த ஒரு உறவோ அல்லது நட்போ மனம் மாறி மீண்டும்
உங்களிடம் இணையும் நிகழ்வுகள் இப்போது கன்னிக்கு இருக்கும்.
கொடுத்து வாங்குவதில் சிக்கல்கள் தோன்றி பணத்தையும், நட்பையும் இழந்து ஏண்டா
பணம் கொடுத்தோம் என்று யோசிக்கும் அளவிற்கு சம்பவங்கள் நடந்தவர்களுக்கு
கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும் மாதம் இது. ராஜயோகாதிபதி சுக்கிரன்
ஆட்சியாகவும், பின்னர் பரிவர்த்தனை அமைப்பிலும் இருப்பது யோகம் என்பதால் எது
நடந்தாலும் மன தைரியத்துடன் சமாளிப்பீர்கள். சுக்கிரன் வலுவால் பிள்ளைகள்
விஷயத்தில் நல்ல பலன்கள் நடைபெறும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.
நீண்டநாள்
நினைத்திருந்த ஒரு காரியம் உங்களுக்கு சாதகமாக நடைபெறும். கலைஞர்கள்,
அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், விவசாயிகள், தனியார் துறையினர், தொழில்
அதிபர்கள் போன்ற அனைவருக்கும் இந்த மாதம் நல்ல மாதமாகவே அமையும். புதன்
வலுவுடன் இருப்பதால் மாத பிற்பகுதியில் அதிர்ஷ்டம் கை கொடுக்கும்.
பணம் வரும் நேரங்களில் சிலருக்கு கடைசி நேரம் வரை பணம் கிடைக்குமா?
கிடைக்காதா? என்று டென்ஷன் இருக்கும். இறுதியில் பணம் கிடைக்கும் என்பது
நிச்சயம். ஆனாலும், அப்போதைய தேவைக்குத்தான் பணம் வருமே தவிர மிச்சம் பிடித்து
சேமிக்கும் அளவிற்கு இருக்காது. சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்பட
வாய்ப்பு இருக்கிறது. தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள்
உருவாகலாம்.
எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். புதிய முயற்சிகளை
செய்வதற்கு தடை இருக்கும். மனம் சற்று அலைபாய்ந்து, முடிவெடுக்கும் திறன்
குறைவாக இருக்கும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுங்கள். வியாபாரிகளுக்கு
எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள்.
1,2,3,4,6,15,19,20,21,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 13 ம் தேதி மதியம்
1.31 மணி முதல் 15 ம் தேதி மாலை 4.29 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால்
புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ
சண்டையோ செய்யாதீர்கள்.
No comments :
Post a Comment