Monday, April 30, 2018

கடகம்: 2018 மே மாத பலன்கள்


கடகம் :

மாதம் முழுவதும் ராஜயோகாதிபதி செவ்வாய் உச்சமாகி, இன்னொரு யோகக் கிரகமான சூரியனும் நன்மை தரும் வீடுகளான பத்து, பதினொன்றாம் இடங்களில் இருப்பதால் மே மாதம் கடக ராசிக்காரர்கள் எதிலும் சாதிக்கின்ற ஒரு மாதமாக இருக்கும். கடந்த காலங்களில் சாதகமற்ற பலன்களை சந்தித்து வந்த கடகத்தினர் அனைத்தும் நீங்கி புத்துணர்ச்சியுடன் புதிய அமைப்புகளுக்கு திரும்புகின்ற மாதம் இது. உங்களில் சிலருக்கு எதிர்பாராத இடத்திலிருந்து கிடைக்கும் உதவியால் நல்ல திருப்பங்களும் வரவுகளும் இருக்கும். சிலருக்கு இன்னும் சில மாதங்களில் நடக்கப் போகும் நன்மைகளுக்கான ஆரம்பங்களும், அறிமுகங்களும் இப்போது இருக்கும்.


இதுவரை வேலை, தொழில் விஷயங்களில் பொருள் இழப்புகளை சந்தித்தவர்கள், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளால் குழப்பத்தில் இருந்தவர்கள் அவை நீங்கப் பெறுவீர்கள். குறிப்பாக நடுத்தர வயதில் இருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த எதிர்மறை எண்ணங்களும், மனச் சங்கடங்களும் விலகும். 

முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த மாதம் நல்லவழி தெரியக் கூடிய அளவிற்கு தீர்வுகள் தேடி வரும். மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். குலதெய்வ தரிசனம் கிடைக்கும். வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு சுபகாரியம் நடத்த முன்னேற்பாடுகள் உண்டு. பூர்வீக சொத்து சம்மந்தமாக பிரச்சனைகள் உள்ளவருக்கு சாதகமான தீர்வு கிடைக்கும்.

வாழ்க்கைத்துணை விஷயத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். சிலருக்கு தீர்த்த யாத்திரை, குலதெய்வ வழிபாடு, காசி, கயா போன்ற புனித ஸ்தலங்களை பார்த்தல் போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்களுக்கு இந்த மாதம் உற்சாகமான மாதமாக இருக்கும். குடும்பத்தில் நீங்கள் சொல்லும் யோசனைகள் ஏற்கப்படும். இளைஞர்கள், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் விஷயத்தில் உங்கள் கவனம் சிதறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

2,5,9,11,13,15,17,18,22,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 8ம் தேதி இரவு 8.59 மணி முதல் 11ம் தேதி காலை 7.11 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

No comments :

Post a Comment