கடகம்:
மாத ஆரம்பத்திலேயே ராசிநாதன் சந்திரன் ராசியில் அமர்ந்து ஆட்சி வலுவுடன்
இருந்தாலும், ராகுவுடன் இணைந்திருப்பதல் கடக
ராசிக்காரர்களுக்கு
கைக்கெட்டியும், வாய்க்கெட்டாத செயல்கள் நடக்கும் மாதமாக இது இருக்கும்.
ராசியின் யோகர்களான சூரியன், செவ்வாய், குரு ஆகியோர் வலுத்திருப்பதால் சிறிது
தடங்கல்கள் வந்தாலும் மாதத்தின் பிற்பகுதியில் உங்கள் முயற்சியினால்
அனைத்தையும் நீங்க வைத்து நீங்கள் வெற்றி பெறும் மாதம் இது.
ராசிநாதன் சந்திரன் ராகுவுடன் சேர்ந்து கிரகண தோஷம் பெற்று வலிமை இழப்பதால்
உங்களுடைய செயல்களில் “இரண்டும்கெட்டான் தனம்” இருக்கும். சில விஷயங்களில்
சட்டென ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவிப்பீர்கள். இது உங்களை சுறுசுறுப்புடன்
செயல்பட முடியாமல் தடுக்கும். எட்டாமிடம் குருவின் பார்வையால் வலுப்பெறுவதால்
புது விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சிலர் தாயாரைக் காண சொந்த
ஊருக்குச் செல்வீர்கள்.. அவரின் ஆசீர்வாதங்களை பெறுவீர்கள். தாயை இழந்தவர்கள்
தெய்வமாகி விட்ட அவரிடம் உங்கள் பிரச்னைகளை மனம் விட்டு கூறி வேண்டினால்
தேவைகள் அனைத்தையும் அவர் நிறைவேற்றுவார்.
வெளிநாடு சம்மந்தப்பட்ட விஷயங்கள் கைகொடுக்கும். சிலர் வெளிநாடு செல்வீர்கள்.
சிலருக்கு எதிர்பாராத மறைமுக இலாபம் கிடைக்கும். அடிக்கடி பயணம் இருக்கும்.
சிலருக்கு வேலை மாறுதல், இடம் மாற்றங்கள் ஆகியவை உண்டு. பெண்களுக்கு மதிப்புக்
கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். நடுத்தர வயதை தாண்டியவர்கள் உடல்நலத்தில்
அக்கறை காட்ட வேண்டியது அவசியம். செவ்வாய் வலுவுடன் இருப்பதால் எந்த ஒரு
வார்த்தையையும் பேசும் முன் யோசித்து பேசுவது நன்மை தரும். எந்த ஒரு
விஷயத்திலும் சோம்பலை ஒதுக்கித் தள்ளி சுறுசுறுப்புடன் இருந்தால் வெற்றி
நிச்சயம்.
1,2,3,7,10,11,16,17 ஆகிய நாட்களில் பணம் வரும். 13-ம் தேதி காலை 8.48 முதல்
15-ம் தேதி இரவு 8.39 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கொண்ட தினங்களில்
நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. ஆயினும் சந்திரன் குருவின்
பார்வையில் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் நடக்காது.
No comments :
Post a Comment