துலாம்:
துலாநாதன் சுக்கிரன் மாத ஆரம்பத்தில் எட்டில் ஆட்சியாகவும், பிறகு
ஒன்பதாமிடத்திலும், மாத பிற்பகுதியில் பத்தாமிடத்திலும் நல்ல நிலைமைகளில்
இருப்பதால் இந்த மாதம் துலாம் ராசிக்கு துன்பங்கள் எதையும் சொல்வதற்கு இல்லை.
மாத ஆரம்பத்தில் பாக்கியாதிபதி புத பகவான் ஒன்பதாமிடத்தில் ஆட்சி பெறுவதால்
இதுவரை தடைபட்டிருக்கும் பாக்கியங்கள் அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கும்.
நீண்ட நாட்களாக திருமணம், வேலை கிடைத்தல், புத்திர பாக்கியம் போன்றவைகள்
தாமதப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு இப்போது அனைத்தும் கிடைக்கும்.
இளையபருவத்தினர் சோம்பலை விட்டு ஒழியுங்கள். அதிகாலையில் எழுந்து வீட்டை
விட்டு வெளியே வந்து வேலையை பார்க்க வந்து விட்டாலே பாதி வேலை முடிந்து
விட்டதாக அர்த்தம். எனவே சுறுசுறுப்பாக ஆக்டிவாக இருங்கள். இதுவரை இருந்து
வந்த எதிர்ப்புகளும் உங்களை இதுவரை எதிர்த்து வந்தவர்களும் மனம் மாறி
உங்களையும், உங்கள் கருத்துகளையும் ஆதரிக்கும் மாதமாகவும் இது இருக்கும்.
சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். கடன்
தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது
நல்லது. வியாபாரிகள், விவசாயிகள், பத்திரிக்கை துறையினர், கலைஞர்கள், அரசு,
தனியார் துறை ஊழியர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த மாதம் நல்ல
மாதம்.
குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி மற்றும்
பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும்.
குறிப்பாக வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களுக்கு உதவிகளும் தேவைகளை
நிறைவேற்றுதலும் இருக்கும். எட்டாமிடம் வலுப்பெறுவதால் இப்போது புதிய
முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. மனம் சற்று அலைபாய்ந்து, முடிவெடுக்கும்
திறன் குறைவாக இருக்கும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுங்கள்.
இரண்டுக்குடையவன் வலுத்து தனயோகம் ஏற்படுவதால் என்ன பிரச்சனைகள் இருந்தாலும்
வருமானத்திற்கு குறைவு இருக்காது.
1,5,6,8,17,18,24,25,27,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 19-ம்தேதி அதிகாலை 3.17
மணி முதல் 21-ம்தேதி அதிகாலை 4.10 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய
விஷயங்கள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். யாரிடமும் கோபப்பட்டு
பேசுவதும் இந்த நாட்களில் கூடாது.
No comments :
Post a Comment