ரிஷபம்:
மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் தனது வீட்டிற்குப் பனிரெண்டில் மறைந்து,
தனது ஆறாம் வீட்டையே பார்க்கும் நிலையில் அமர்வதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு
சுமாரான நன்மைகள் மட்டுமே நடக்கும் மாதமாக ஜூன் மாதம் இருக்கும். இரண்டில்
செவ்வாய் அமர்ந்து. சனியும் இரண்டாமிடத்தைப் பார்ப்பதால் பணத்திற்காக பொய் பேச
நேரலாம். அதனால் பணம் கிடைக்கும். யாரிடமும் சண்டை போடாதீர்கள். வாக்குவாதமும்
செய்யாதீர்கள். சிறியதாக ஆரம்பிக்கும் பிரச்னை பெரியதாக மாறி நண்பர்களை
விரோதியாக்கும். பேசுவதிலோ திட்டுவதிலோ கவனமாக இருங்கள். கோபத்தைக்
கட்டுப்படுத்துங்கள்.
ஆறாமிடம் வலுப்பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல
உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். செய்யாத குற்றத்திற்கு
வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால்
அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல் படுவது நல்லது. லாபாதிபதி வலுவாக
இருப்பதால் தாராளமான பணவரவு இருக்கும். வெளிநாட்டில் இருந்து பணம் வரும்.
சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். குறிப்பாக
அத்தைகளால் உதவிகள் இருக்கும். சிலருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் இந்த
மாதத்தில் இருந்து விலக ஆரம்பிக்கும்.
நீண்ட நாட்களாக அம்மாவை விட்டுப் பிரிந்து இருப்பவர்கள் இந்த மாதம் அவரை
நேரில் சென்று பார்த்து, ஆசிர்வாதங்களைப் பெற்று வருவது உங்களுக்கு இன்னும்
சிறப்புகளைச் சேர்க்கும். பெண்கள் விஷயத்தில் நன்மை நடக்கும். பெண்கள்
உதவுவார்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு.
எந்தக் காரணத்தை முன்னிட்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். அதனால்
பிரச்னைகள் வரும். பணவரவுகள் நன்றாக இருக்கும் என்றாலும் சிக்கனத்தை
கடைபிடியுங்கள். தேவையற்ற பொருட்கள் வாங்குவதால் விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு
இருக்கிறது.
2,4,5,6,7,11,12,13,25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 10-ம்தேதி அதிகாலை 5.11
மணி முதல் 12-ம்தேதி பகல் 5.30 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த
நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பதும், அறிமுகமில்லா ஆட்களிடம்
தேவையின்றி விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பதும் நல்லது.
No comments :
Post a Comment