கும்பம்:
ராசியில் கேதுவும், ஏழாமிடத்தில் ராகுவும் சுபத்துவம் இல்லாத நிலையில்
அமர்ந்து, கணவன் மனைவியைக் குறிக்கும் இடம் பலவீனம் பெற்ற நிலையில்
இருந்தாலும், அவருக்கு வீடு கொடுத்த சூரியன் உச்ச நிலையில் இருப்பதால்
கும்பத்தினருக்கு வாழ்க்கைத் துணைவர், நண்பர்கள், பங்குதாரர்கள்
போன்றவர்களிடம் கருத்து வேறுபாடுகளும், மனஸ்தாபமும் வருவது போலத் தோன்றினாலும்
மாத இறுதியில் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல விலகி ஓடி விடும் மாதமாக இது
இருக்கும்.
பொதுவாக கும்ப ராசிக்காரர்களுக்கு சூரிய, சந்திரர்கள் வலுப் பெறும்போது
நற்பலன்கள் குறைவாகவே இருக்கும். இந்த மாதத்தில் சூரியன் பலமாக இருந்தாலும்
சுக்கிர உச்சம் மற்றும் குரு பார்வையால் தன ஸ்தானம் வலுவடைவதால் மறைமுகமான
வருமானங்கள் உங்களுக்கு வரும். அதேநேரத்தில் விழிப்புணர்ச்சியுடன் இருக்க
வேண்டியதும் அவசியம். தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள்
உருவாகலாம். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். நாற்பது வயதிற்கு
மேற்பட்டவர்கள் உடல்நலத்தில் கவனம் வைக்க வேண்டும்.
குறிப்பிட்ட சிலர் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். ஆலயத்
திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். கலைஞர்களுக்கு இது நல்ல மாதமாக
அமையும். வேலை செய்யும் இடங்களில் உங்கள் திறமையை காட்ட முடியும். நண்பர்களால்
மதிக்கப் படுவீர்கள். அந்தஸ்து, கௌரவம் நிலையாக இருக்கும். அதிர்ஷ்டம் கை
கொடுக்கும். தெய்வ ஆசிர்வாதம் உண்டு. குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். ஞானிகள்
தரிசனம் கிடைக்கும். பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள்
குறையும். சமீப காலமாக வேலையில் பிரச்சனை ஏற்பட்டு, வேலைமாற்றம்
ஏற்பட்டவருக்கு இந்த மாதம் மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும்.
2,5,11,13,15,21,22,24,25,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 6 ம் தேதி மதியம்
12 .30 மணி முதல் 8 ம் தேதி இரவு 10.50 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால்
புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ
சண்டையோ செய்யாதீர்கள்.
No comments :
Post a Comment