Tuesday, May 2, 2017

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 133 (2.5.2017)

. வெங்கடேசன், கோவை - 15.

கேள்வி :

என்னுடைய ஜாதகத்தைப் பார்த்தாலே பிறந்ததிலிருந்து நான் பட்ட துன்பங்கள் அளவில்லாதது என்பதை அறிந்து கொள்வீர்கள். ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பிறந்தது ஒரு இடம். வளர்ந்தது ஓரிடம். வாலிபம் இன்னொரு இடம் என்றாகி விட்டது. வசந்தம் எப்போதும் வரும் என்ற கண்ணீருடன் எழுதுகிறேன். தற்போது செய்யும் டி. வி. சர்வீஸ் வேலை மிகவும் மோசமாக உள்ளது. நல்ல வருமானம் எப்போது கிடைக்கும்? வேறு வேலை மாற்றிக் கொள்ளலாமா? போட்டோ ஸ்டூடியோ வைக்கலாமா ? குருவாக இருந்து நல்ல வழிகாட்டுங்கள்.


சந் சனி
ரா
ராசி
ல,சூ
பு,செ
சு,கே
குரு


பதில்:

(கடக லக்னம், மீன ராசி. 1-ல் சூரி, புத, செவ். 2-ல் சுக், கேது. 4-ல் குரு. 10-ல் சனி. 23.7.1970, காலை 7 மணி, கோவை)

மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ ஏழரைச்சனி நடக்கும் நிலைகளில் குடும்பத் தலைவரின் தொழில் அமைப்புகளும், வருமானங்களும் பாதிக்கப்படத்தான் செய்யும். உங்கள் மனைவிக்கு தற்போது விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரமாகி, ஏழரைச்சனி நடப்பில் உள்ளதால் உங்களுக்கு பொருளாதார பிரச்சினைகள் இருக்கும்.

சனி நடக்கும்போது ஒருவரின் உடல், மனம் இரண்டும் பாதிப்படையும். நமது கலாச்சாரத்தின்படி ஒரு பெண் தன்னைவிட, தனது சுகத்தை விட தனது கணவன், குழந்தைகளின் சுகத்தையே பெரிதாக நினைப்பவள். எனவே அவளுக்கு மனவருத்தம் அல்லது மன அழுத்தம் ஏற்பட வேண்டும் என்றால் அவளது கணவன் அல்லது குழந்தைகள் பாதிக்கப்பட வேண்டும்.

அதன்படி உங்களுக்கு தொழில் சிரமங்கள் கடந்த ஐந்து வருடங்களாக கடுமையாக நடந்து கொண்டிருக்கும். ஜாதகப்படி சிறுவயதில் இருந்தே எட்டுக்குடைய சனிதசை நடந்து வந்ததாலும், சனிபகவான் கடக லக்னத்திற்கு யோகம் தரமாட்டார் என்ற அமைப்பினாலும் உங்களுக்கு சிரமங்கள் இருந்து வந்தது உண்மைதான்.

பத்தாமிடத்தில் சனிபகவான் சுபத்துவமுடன் இருப்பதால் போட்டோ ஸ்டூடியோ தொழில் உங்களுக்கு ஏற்றதுதான். தற்போது இருக்கின்ற தொழில் சிக்கல்கள் இந்த வருடம் இறுதியுடன் மாறும் என்பதால் மனம் தளர வேண்டாம். நடந்து கொண்டிருக்கும் சுக்கிர தசையில் அடுத்த வருடம் ஆரம்பிக்க இருக்கும் ராகு புக்தி முதல் உங்களுக்கு நல்ல மாற்றங்கள் இருக்கும். ராகு பகவான் எட்டாம் வீட்டில் இருந்தாலும் குரு, சுக்கிரன் இருவரும் அவரை பார்ப்பதால் உங்களுக்கு நன்மைகளை நிச்சயமாக செய்வார்.

அடுத்த ஆண்டு முதல் உங்கள் பொருளாதார நிலைமை சீராகும். நல்ல தொழில் மாற்றங்கள் இருக்கும் என்பதால் நம்பிக்கையுடன் இருங்கள். வாழ்க்கையில் நிச்சயமாக ஜெயீப்பீர்கள். சுக்கிரனை அடுத்து வருகின்ற சூரிய, சந்திர, செவ்வாய் தசைகள் உங்களுக்கு யோக தசைகள் என்பதால் வாழ்வின் பிற்பகுதியில் நீங்கள் கேட்ட வசந்தம் கண்டிப்பாக வரும்.

. குமாரசாமி, சென்னை - 100.

கேள்வி:

குருஜி அவர்களுக்கு வணக்கம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் உதவி இயக்குனராக வேலை செய்தேன். தற்சமயம் கார் ஓட்டி வருகிறேன். மீண்டும் சினிமாவிற்கு செல்ல காலம் வருமா? இறைவனின் அருளால் திரைப்படம் இயக்க முடியுமா?

சனி கே
ராசி
ல,சந்
குரு,
ரா
சூ,பு சு,செ


பதில்:

(கடக லக்னம், கடக ராசி. 4-ல் சுக், செவ். 5-ல் சூரி, புத. 6-ல் குரு, ராகு. 11-ல் சனி. 25.11.1972, இரவு 9.30, திருவண்ணாமலை.)

பத்து ஆண்டுகளுக்கு முன்பு சுக்கிர தசை ஆரம்பித்து நடந்து கொண்டிருந்ததால் உங்களுக்கு தொழில் ஸ்தானத்தை பார்க்கும் சுக்கிரனால் சினிமா தொடர்புகள் ஏற்பட்டு உதவி இயக்குனராக இருந்தீர்கள். தற்பொழுது சுக்கிர தசை முடிய இருப்பதால் சினிமாத்துறைக்கு திரும்ப முடியாது. இருக்கின்ற வேலையில் மனதை செலுத்தி இதையே சிறப்பாக செய்து முன்னேறுங்கள்.

எஸ். புருஷோத்தம் ராஜன், மதுரை.

கேள்வி:

பிறந்த தேதி, நாள், நட்சத்திரம், ராசி எதுவும் தெரியாதவர்கள் பலன்கள் அறிவது எப்படி? ஆங்கிலப் பெயரின் முதல் எழுத்தை வைத்து பலன்கள் அறியலாம் என்பது பற்றி?

பதில்:

இதுபோன்ற நிலையில் இருப்பவர்களுக்குத்தான் ஆரூடம், பிரச்னம் போன்ற முறைகள் ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளன, ஒரு கேள்வியோடு நீங்கள் ஜோதிடரிடம் செல்லும்போது, கேள்வி கேட்கப்படும் நேரத்தை லக்னமாக வைத்து அப்போது கிரகங்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதைக் கணித்து ஞானமுள்ள ஒரு ஜோதிடரால் தெளிவாகவே பதில் சொல்ல முடியும்.

பத்திரிகைகளில் வரும் ராசிபலன்களை எப்படி தெரிந்து கொள்வது என்பது உங்கள் கேள்வியாக இருந்தால் இந்த வாரம் உங்களுக்கு என்ன நடக்கும் என்று எழுதப்படும் ராசிபலன்கள் பொதுவான ஒன்றுதான். எல்லோருக்கும் இவை பொருந்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. பொருந்தவும் செய்யாது.

இதுபோன்ற ராசி நட்சத்திரம் ஒருவருக்குத் தெரியாத நிலை வரும் என்பதற்காகத்தான் நட்சத்திரப்படி பெயரின் முதல் எழுத்து வைக்கும் முறை ஞானிகளால் அறிவுறுத்தப் பட்டது. பிறந்த நட்சத்திரப்படி பெயர் வைத்திருந்தால் அந்த எழுத்தின் நட்சத்திரத்தைக் கொண்டு உங்களின் பலன்களை அறிந்து கொள்ளலாம். ஆனால் இப்போது எல்லோரும் இப்படி பெயர் வைப்பது இல்லை.

ஆங்கில எழுத்து முறை என்பது மேற்கு நாடுகளுக்கு மட்டுமேயான ஒன்று. அதுவும் இந்திய வேதஜோதிடத்தைப் போல முழுமையான ஒன்றல்ல. தோராயமானது. உலகம் முழுவதும் குடியும், கூத்துமே சந்தோஷம் என்று கிடந்தபோது, பண்பட்ட இந்தியபூமி மட்டுமே அதையும் தாண்டி ஒரு இன்பம் இருக்கிறது என்று முயற்சித்து ஞானமார்க்கத்தைக் கண்டெடுத்து அதன் மூலமாக பரம்பொருள் தந்த ஜோதிடத்தையும் சொந்தமாக்கிக் கொண்டது.

இப்போது கூட பாருங்களேன். தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் ஒரு மனிதன் எப்படியும் வாழ்வதற்குத்தானே மேற்கு நாடுகள் அனுமதிக்கின்றன? நமது கலாச்சாரம் அப்படியல்லவே? எனவே ஜோதிட விஷயத்தில் கிழக்கில் பிறக்கும் ஒருவனுக்கு மேற்கில் அமையும் எதுவும் துல்லியமானதாக இருக்காது. இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் ஒரு அமெரிக்கருக்கு இந்திய ஜோதிட விதிகளின் படி துல்லியமாக பலன் சொல்ல முடியாது. இது அமெரிக்காவில் பிறக்கும் இந்தியக் குழந்தைகளுக்கும் பொருந்தும்.

ப. லீலாவதி, உத்திரகோசமங்கை.

கேள்வி:

ஜோதிடச் சக்கரவர்த்திக்கு வணக்கம். அனுப்பியிருக்கும் இரண்டு ஜாதகங்களுக்கு பொருத்தம் பார்த்து திருமணம் செய்யலாமா வேண்டாமா என்று சொல்லும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.

பதில்:

பொருத்தம் பார்க்கும் கேள்விகளை எனக்கு அனுப்ப வேண்டாம். அது என் பார்வைக்கு வந்து, அதற்கு நான் பதில் சொல்லி, மாலைமலரில் வெளி வருவதற்குள் திருமணமே முடிந்து விடலாம். எனவே பக்கத்தில் இருக்கும் அனுபவமுள்ள நல்ல ஜோதிடரிடம் காட்டுங்கள். உங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் எதையும் கணிக்கக் கூடிய மிகச்சிறந்த ஜோதிடர்கள் இருக்கிறார்கள்.

என் தம்பிக்கு ஆண்மைக் குறைவு இருக்கிறதா?

ஒரு சகோதரி , பரமக்குடி .

கேள்வி :

என்னுடன் பிறந்தவர்கள் இருவரும் இரட்டைக் குழந்தைகள். ஒருவர் ஆண். இன்னொருவர் பெண். இவர்கள் பிறந்தது முதல் குடும்பத்தில் பலவிதமான சோதனைகளை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அனுபவிக்கிறோம். முதலில் பிறந்தது தம்பி. இரண்டாவது தங்கை. தங்கைக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லை. பரிசோதனையில் தங்கையின் கணவருக்கு அணுக்கள் குறைவாக உள்ளது என்று சொன்னதால் தங்கை மனமுடைந்து விட்டாள. நாங்கள்தான் இறைவனை நம்பிக்கையோடு வணங்கி வருகிறோம். இவள் வேதனை இப்படியென்றால், தம்பியின் நிலையை வெளியில் சொல்லவும் முடியவில்லை. மெல்லவும் முடியவில்லை. கடைசி பிள்ளை என்று கொஞ்சம் செல்லம் கொடுத்து வளர்த்து விட்டோம். பிளஸ்டூவிற்கு மேல் அவன் படிக்கவில்லை. 36 வயதாகியும் நிறந்தரமான வேலையும் இல்லை. உடல் ரீதியாக அவனுக்கு குறை இருப்பதாக சொல்லி அதையே அடிக்கடி நினைத்து டென்ஷன் ஆகிறான். எப்போதும் மற்றவர்கள் மீது வெறுப்பாக இருக்கிறான். ஆண்மைக்குரிய உணர்வுகள் இல்லை என்று அவனே சொல்கிறான். கேரளா நாட்டு மருந்து கொடுத்தால் ஒழுங்காக சாப்பிடுவதில்லை.  வேலையும் இல்லை. திருமணமும் வேண்டாம் என்று பிடிவாதமாக விரக்தியாக பேசுகிறான். இவர்கள் இருவரின் வாழ்க்கையும் எப்படி இருக்கும் என்று தயவுசெய்து தெளிவாக சொல்லுங்கள்.


செ
ராசி
சூ,பு
ரா
கே சுக்
ல,சந் குரு,
சனி


செ
ராசி
சூ,பு
ரா
கே சு
சந் வி,
சனி

பதில்:

(துலாம் லக்னம், துலாம் ராசி. 9-ல் செவ். 10-ல் சூரி, புத, ராகு. 11-ல் சுக். 12-ல் குரு சனி. 7.8.1981, மதியம் 12.40, பரமக்குடி. பெண் 7.8.1981, மதியம் 1.20, விருச்சிக லக்னம்)

இரட்டைக் குழந்தைகள் இரண்டு நிமிட வித்தியாசத்தில் பிறந்ததாலே இருவருக்குமிடையே நிறைய மாறுதல்கள் இருக்கும். ஆனால் இங்கே இவர்கள் 40 நிமிட இடைவெளியில், லக்னம் மாறிய நிலையில் பிறந்திருப்பதால் இருவருக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு.

முதலில் பிறந்த உங்கள் தம்பிக்கு துலாம் லக்னம், துலாம் ராசியாகி லக்னாதிபதியும், ராசிநாதனுமான சுக்கிரன் பகை வீட்டில் அமர்ந்து வலுவிழந்த நிலையில், ஆறுக்குடைய குருபகவான் பனிரெண்டில் மறைந்து தனது ஆறாம் வீட்டையே பார்த்து வலுப்படுத்துகிறார். ஆகவே இவருக்கு உடல், மனரீதியாக தன்னம்பிக்கை அற்ற நிலை இருக்கும்.

மேலும் உங்கள் தம்பிக்கு 6 வயது முதல் 41 வயது வரை ஏறத்தாழ 35 வருடங்கள் பனிரெண்டாமிடத்தில் மறைந்து ஆறாமிடத்தைப் பார்த்த குரு, சனி தசைகள் நடக்க இருக்கின்றன. லக்னாதிபதி வலுவிழந்த நிலையில் ஆறாமிடத்தோன் வலுப்பெற்று அவன் சம்பந்தபட்ட தசைகள் நடப்பது அனைத்து வித பாக்கியங்களையும் தடுக்கும்.

ஜாதகப்படி உங்கள் தம்பிக்கு ஆண்மைக் குறைவு ஏற்பட வாய்ப்பு இல்லை. உடல் ரீதியாக குறைபாடுகள் எதுவும் அவருக்கு இருக்காது. நீங்கள் எந்த மருத்துவரிடம் சென்று சோதனை செய்தாலும் இதை உறுதி செய்து கொள்ளலாம். மருத்துவரும் இதையேதான் சொல்வார். ஆனால் தனக்கு ஆண்மை இல்லையோ என்ற எதிர்மறையான எண்ணம்தான் உங்கள் தம்பியை தற்போது ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது. அவரது 40 வயது வரை இந்த நிலை நீடிக்கும்.

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னமோ, ராசியோ ஆணுமற்ற, பெண்ணுமற்ற கிரகங்கள் என்று சொல்லக் கூடிய சனி, புதன் இவர்களின் பாபத்துவ ஆளுமையில் இருக்கும்போது மட்டுமே ஒருவருக்கு ஆண்மைக் குறைவு ஏற்படும். இந்த ஆண்மைக் குறைவை உறுப்பு எழுச்சியின்மை என்றும் சொல்லலாம். ஜாதகப்படி இந்த குறை உங்கள் தம்பிக்கு இல்லை.

ஆனால் நெகடிவ் எண்ணங்களைத் தரக் கூடிய ஆறாமிடம் வலுப்பெற்று, அவை சம்பந்தப்பட்ட தசைகள் நடந்து கொண்டிருப்பதால், உங்கள் தம்பி இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு, ஒரு கனவுலகில் தவறான எண்ணங்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பார். எனவே பரிகாரங்கள் செய்தாலும் சரியாகும் நிலை தற்போது உங்கள் தம்பிக்கு இல்லாததால் இறைவனை வணங்குவதைத் தவிர வேறு வழி இல்லை.

அவருக்கு 40 நிமிடங்கள் பின் பிறந்த தங்கைக்கு விருச்சிக லக்னமாகி, ஐந்திற்குடைய குருபகவான், சனியுடன் ஒரு டிகிரிக்குள் மிக நெருக்கமாக இணைந்து, செவ்வாயின் பார்வையை பெறுவதாலும், ராசிக்கு ஐந்திற்குடைய சனி செவ்வாய் பார்வை பெற்று, ராசிக்கு பனிரெண்டில் மறைவதாலும், தாமதமான புத்திரபாக்கிய அமைப்பு இருக்கிறது. இந்தப் பெண்ணிற்கு உறுதியாக குழந்தை பாக்கியம் உண்டு. இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து இவருக்கு குழந்தை பிறக்கும். கணவருக்கும் இதே அமைப்பில் புத்திரதோஷ குறைகள் இருக்கும் என்பதால் கணவன்–மனைவி இருவரும் முறையான பரிகாரங்களை செய்து கொள்வது நல்லது.

No comments :

Post a Comment