துலாம்:
மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் உச்ச நிலையில் இருப்பதும் அவரை இன்னொரு
இயற்கை சுபரான குருபகவான் பார்ப்பதும் நல்லவைகள் நடக்கும் அமைப்புகள் என்பதால்
இந்த மாதம் துலாம் ராசிக்கு குறைகள் எதுவும் சொல்ல காரணங்கள் இல்லை. அதே
நேரத்தில் செவ்வாய் வலுப்பெற்று ராசியை பார்க்கும் நிலையில் எந்த ஒரு
செயலிலும் உங்களிடம் அவசரம் தெரியும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது
நல்லது. கோபத்தையும் இந்த மாதம் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ராசிநாதன் ஆறாமிடத்தில் உச்ச வக்ரம் அடைவதால் தேவைக்கு அதிகமாக கடன் வாங்க
வேண்டாம். உடல்நலத்தில் அக்கறை காட்டவேண்டி இருக்கும். யாரையும் நம்பி
வாக்குறுதி கொடுக்க வேண்டாம். கிரெடிட்கார்டு இருக்கிறது என்று தேவை இல்லாததை
வாங்கிவிட்டு சிக்கலில் மாட்டாதீர்கள். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள்
வீண் அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. யாரையும் நம்ப வேண்டாம். மனதில்
உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். துரோகம்
நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக
இருங்கள்.
வியாபாரிகளுக்கு இது சுமாரான காலகட்டம்தான். அரசு, தனியார்துறை ஊழியர்கள்
தங்களுடைய மேலதிகாரிகளின் பேச்சை கேட்டு செயல்படுவது நல்லது. சட்டத்தை மீறி
யாருக்கும் சலுகைகள் காட்டாதீர்கள். நுணுக்கமான துறைகளில் இருப்பவர்கள்
கவனமுடன் இருப்பது நல்லது. மாத ஆரம்பத்தை விட மாதத்தின் பிற்பகுதி நன்மைகளைத்
தரும். சனிபகவான் மூன்றாம் இடத்தில் இருப்பது எதையும் சமாளிக்கும் ஆற்றலையும்,
திறமையையும் உங்களுக்கு தரும் என்பதால் இந்த மாதம் சங்கடங்கள் இல்லாத மாதமாக
இருக்கும்.
4,5,6,7,8,9,11,13,14,21,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 4-ம் தேதி காலை 6 மணி
முதல் 6-ம்தேதி காலை 8 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் முக்கிய
முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம். புதிய முயற்சிகள்
ஆரம்பங்கள் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
No comments :
Post a Comment