விருச்சிகம்:
ராசிக்கு சுபர்பார்வை இல்லையென்றாலும் ராசிநாதன் செவ்வாய் சுபத்துவமுடன்
இருப்பதால் இந்த மாதம் விருச்சிக ராசிக்காரர்கள் எதைப்பற்றியும் கவலைப்பட
தேவையில்லாத வண்ணம் சாதகமான, சந்தோஷமான நிகழ்ச்சிகள் இருக்கும் என்பது உறுதி.
அதிசார நிலையில் தற்காலிகமாக சனிபகவான் ராசியிலிருந்து விலகியிருப்பது
உங்களுக்கு நிம்மதியைத் தருகின்ற ஒரு அமைப்பாக இருக்கும். சனி தந்த துயரங்கள்
எதுவும் இனிமேல் உங்களுக்கு இருக்காது. வருங்காலம் விருச்சிகத்திற்கு இனிமையாக
இருக்கப் போகிறது. இனியெல்லாம் சுகம்தான்.
அந்தஸ்து கௌரவம் உயரும்படியான சம்பவங்களும் குடும்பத்தில் மனமகிழ்ச்சியான
நிகழ்ச்சிகளும் இருக்கும். வீடு வாகனம் போன்ற விஷயங்களில் இதுவரை நிறைவேறாத
எண்ணங்கள் நிறைவேறும். கணவன் மனைவி பூசல்கள் எதுவும் இருக்காது.
ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பீர்கள். உங்களின் உடல்நலம் மனநலம்
திருப்திகரமாக இருக்கும். தாயாரைக் காண சொந்த ஊருக்குச் செல்லலாம். அவரின்
ஆசீர்வாதங்களை இந்த மாதம் பெறுவீர்கள்.
தாயை இழந்தவர்கள் தெய்வமாகி விட்ட அவரிடம் உங்கள் பிரச்னைகளை மனம் விட்டு கூறி
வேண்டினால் உங்கள் தேவைகள் அனைத்தையும் அவர் நிறைவேற்றுவார். பெண்களுக்கு
மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். நடுத்தர வயதை தாண்டியவர்கள்
உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். செவ்வாய் வலுவுடன் இருப்பதால்
கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. எந்த ஒரு வார்த்தையையும் பேசும் முன்
யோசித்து பேசுவது நன்மை தரும். எந்த ஒரு விஷயத்திலும் சோம்பலை ஒதுக்கித் தள்ளி
சுறுசுறுப்புடன் இருந்தால் வெற்றி நிச்சயம்.
4,5,6,12,13,14,22,23,24,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 7-ம் தேதி அதிகாலை 3
மணி முதல் 9-ம் தேதி அதிகாலை 5 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த
நாட்களில் போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். இந்த நாட்களில் மனம்
ஒரு நிலையில் இருக்காது என்பதால் முக்கியமான முடிவுகள் எடுப்பதையும்
தவிர்ப்பது நல்லது.
No comments :
Post a Comment