Saturday, May 14, 2016

2016 வைகாசி மாத பலன்கள்

மேஷம்:

மாதம் முழுவதும் மேஷநாதன் செவ்வாய் சனியுடன் இணைந்த நிலையில் இருக்கிறார். எனவே, இந்தமாதம் மேஷராசிக்கு தேவையற்ற மனக்கலக்கங்களும் சிறிய விஷயங்களை பெரிதாக்கி பார்ப்பதும், சிலருக்கு எதிர்காலத்தை பற்றிய கவலைகளும் உள்ள மாதமாக இருக்கும். அதேநேரத்தில் இது செலவு செய்யும் மாதமாக இருக்கும். செலவு செய்ய வேண்டும் என்றால் பணவரவும் இருக்கும். எனவே செலவை நினைத்துக் கலங்கத் தேவையில்லை. நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த பொருளை வாங்குவீர்கள்.

பூர்வீகச் சொத்தில் ஏதாவது மனக்கஷ்டங்கள் வரலாம். வயதான அப்பாவை கொண்டவர்கள் அவருடைய ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருங்கள்.. சிலருக்கு மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல்படுவது நல்லது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

ரிஷபம்:

வைகாசி மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பதால் இந்த மாதம் ரிஷபராசிக்கு யோகமாகவே இருக்கும். சுக்கிரன் ராசியிலேயே இருக்கும் அமைப்பு பெறுவதால் ராசி வலுவடைகிறது. எனவே இந்த மாதம் உங்களுடைய எண்ணங்கள் யாவும் பலிக்கும் மாதமாக இருக்கும். அதேநேரத்தில் வலுப்பெற்ற செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் உங்களை எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடக்கும் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம்.

அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள். அதிகாரம் செய்யக்கூடிய பதவியில் இருப்பவர்களுக்கு இரண்டுங்கெட்டான் நிலை இருக்கும். சிலர் இரண்டு அதிகார மையத்துடன் போராடுவீர்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் சிலர் உங்களை விட்டு விலகுவார்கள். முதல் திருமணம் தோல்வியில் முடிந்தவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லமுறையில் அமைவதற்கான ஆரம்பங்கள் இப்போது இருக்கும். குறிப்பிட்ட சிலர் வெளிநாடு செல்வீர்கள். பிறந்த நாட்டை விட்டு வேறு நாட்டில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்:

ராசிநாதன் புதன் குருவின் பார்வையில் இருப்பதும் சுக்கிரன் ஆட்சி பெற்று பாக்கிய லாபாதிபதிகள் சனியும், செவ்வாயும் அவரைப் பார்ப்பதும் மிதுனராசிக்கு அனைத்து விஷயங்களிலும் நல்லபலன்களையும் நிம்மதியையும் தரக்கூடிய அமைப்பு என்பதால் வைகாசி மாதம் மிதுனத்திற்கு வசந்த மாதமாக இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு உல்லாச அனுபவங்கள் உண்டு. இன்னும் சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு நன்மை தரும் மாதம் இது.

இதுவரை மந்தமாக இருந்து வந்த வேலை தொழில், வியாபாரம் போன்றவைகள் இனிமேல் விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும். கடன் தொல்லைகளால் அவதிப்பட்டவர்களுக்கு கடன் பிரச்னைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. முப்பது வயதுகளில் இருக்கும் இளைஞர்கள் இனிமேல் தன்னம்பிக்கையுடன் எதையும் சாதிப்பீர்கள். எதிர்காலத்தில் நீங்கள் வளமான வாழ்க்கை வாழக்கூடிய அமைப்புக்கு அஸ்திவாரம் போடும் மாதமாக இது அமையும்.

கடகம்:

கடகத்தின் யோகாதிபதிகள் சூரியனும், செவ்வாயும் நல்ல நிலையில் இருப்பதும் பாக்கியாதிபதி குருபகவான் இரண்டாமிடத்தில் இருப்பதும் வைகாசிமாதம் கடகராசிக்கு செலவுகளை தந்தாலும் அதற்கேற்ப பணவரவுகளையும் சுபச்செலவுகள் மூலமாக குடும்ப சந்தோஷங்களையும் தரும் மாதமாக இருக்கும். இரண்டாமிடத்திலிருக்கும் ராகுவால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு வருவதற்கு இடமிருக்கிறது என்பதால் இப்போதிலிருந்தே அது வராமல் இருக்கக்கூடிய முயற்சிகளை தம்பதிகள் எடுத்துக் கொள்வது நல்லது..

மனைவியின் பேச்சை கேட்பதனால் ஒன்றும் குறைந்து விடாது என்பதால் முக்கியமான விஷயங்களில் தம்பதிகள் இருவரும் கருத்தொற்றுமையோடு முடிவெடுப்பது நல்லது. உங்கள் செயல்கள் அனைத்திலும் பதற்றமும், படபடப்பும் காணப்பட்டாலும் உங்களுடைய மனோதைரியம் கூடுதலாகும். குருவுடன் இருக்கும் ராகுவால் சிலருக்கு சூதாட்டம், பங்குச்சந்தை, லாட்டரி போன்றவைகளில் ஆர்வம் வரும். அதனால் நஷ்டங்கள் இருக்கும் என்பதால் தற்போது ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடவேண்டாம்.

சிம்மம்:

சிம்மநாதன் சூரியன் வலுவான நிலையில் பத்தாம் வீட்டில் ஜீவனாதிபதி சுக்கிரனுடன் இணைந்திருப்பது மிகவும் சிறந்த அமைப்பு என்றாலும் மாதம் முழுவதும் ராசியும் ராசிநாதன் சூரியனும் ஜென்மவிரோதியான சனியின் பார்வையில் இருப்பதால் கெடுபலன்கள் எதுவும் நடக்காவிட்டாலும் ஏதேனும் தவறாக நடந்துவிடுமோ என்ற மனக்கலக்கத்தை உங்களுக்கு தரும் மாதமாக வைகாசி மாதம் இருக்கும். சில புதிய அறிமுகங்கள் இப்போது உங்களுக்கு உண்டு. அதனால் நன்மைகளும் உண்டு.

குறிப்பிட்ட சிலருக்கு தந்தைவழி உறவினர்களால் லாபம் கிடைக்கும். அப்பாவின் ஆசிர்வாதத்தால் சில நன்மைகளைப் பெறுவீர்கள். பூர்வீக சொத்தில் வில்லங்கம் இருந்தவர்களுக்கு தீர்வு கிடைக்கும். வழக்குகள் இனிமேல் உங்களுக்கு சாதகமாக திரும்பும். இளைய பருவத்தினருக்கு எதிர்கால வாழ்க்கைக்கான திருப்புமுனை சம்பவங்கள் இந்த மாதம் நடக்கும். சிலர் தங்களுடைய வாழ்க்கைத் துணைவரை இப்போது சந்திப்பீர்கள். ராசிநாதன் பலம் பெற்றதால் எதையும் சமாளிப்பீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு பெண்களால் பிரச்சினைகள் இருக்கும்.

கன்னி:

யோகாதிபதி சுக்கிரன் மாதம் முழுவதும் நல்லநிலையில் இருப்பதோடு இன்னொரு யோகாதிபதி சனி பகவானுடனும் சம்பந்தப்பட்டிருப்பதால் வைகாசி மாதம் உங்களுக்கு யோகமாதம்தான். அதேநேரத்தில் ராசிநாதன் புதன் எட்டில் மறைவதால் மனவருத்தங்கள் தரும் சம்பவங்கள் நடக்கும் மாதமாகவும் இது இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும்.

திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு இந்த மாதம் நல்ல செய்திகள் இருக்கும். குறிப்பாக இளம் பருவத்தினர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணைவரை தேர்ந்தெடுக்கக் கூடிய சம்பவங்கள் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்ச்சிகளும் ஒரு சிலருக்கு வீட்டுப்பொருள் சேர்க்கையும் இருக்கும். சிலருக்கு இருக்கும் ஊரை விட்டு டிரான்ஸ்பர் ஆகுதல், வெளிமாநிலம், வெளிநாடு போன்றவைகளில் வேலை கிடைத்தல், வீடு மாற்றுதல் போன்ற பலன்கள் இப்போது நடக்கும்.

துலாம்:

வைகாசிமாதம் ராசிநாதனும் எட்டுக்குடையவனுமான சுக்கிரபகவான் எட்டாமிடத்தில் ஆட்சிபெற்று சூரியனுடன் கூடுவதால் துலாம் ராசிக்கு அனைத்து விஷயங்களிலும் தடைகள் ஏற்பட்டு சுலபமாக நடக்கக்கூடிய விஷயங்கள் கூட கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கும் மாதமாக இருக்கும். அதே நேரத்தில் எட்டாமிடம் வலுப்பெறுவதால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டமாக ஒரு நல்ல பணவரவும் இந்தமாதம் கிடைக்கும். குழந்தைகள் விஷயத்தில் செலவுகளோ, விரயங்களோ வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

பத்தாமிடம் வலுப்பெற்று இருப்பதால் தொழில் வைத்திருப்பவர்கள் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த மாதம் மிகவும் நன்மைகளைத் தரும். உற்சாகமாக இருப்பீர்கள். நண்பர்கள் உதவி கிடைக்கும். பெண்களாலும் செலவுகள் உண்டு. அன்னிய இன, மத, மொழிக்காரர்கள் உதவுவார்கள். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். நீண்ட நாட்கள் உடல் நலம் இல்லாமல் இருந்தவர்கள் இப்பொழுது குணம் அடைவார்கள். எட்டுக்குடையவன் வலுவாக இருப்பதால் மாற்றங்கள் வரும்.

விருச்சிகம்: 

பத்துக்குடையவன் மாதம் முழுவதும் ஏழாம் வீட்டில் அமர்ந்து ராசிநாதன் செவ்வாய் அவரைப் பார்ப்பதால் வைகாசி மாதம் விருச்சிகராசிக்கு வருத்தங்களைத் தராமல் நல்ல நிலையையும், நல்ல வாய்ப்புகளையும் மட்டுமே தரும் மாதமாக இருக்கும். குறிப்பாக விசாகம் அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு இனிமேல் பிரச்னைகள் எதுவும் வராது. அதே நேரத்தில் ஜென்மச்சனி அடுத்த வருடம்தான் முடியும் என்பதால் எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

வெகுநாட்களுக்கு பிறகு இளைய பருவத்தினருக்கு இப்போது பொருளாதார நிலைமை மேம்படும். உங்கள் கையில் பணம் இல்லாமல் இருந்த நிலை மாறும். செலவிற்கு அடுத்தவர் கையை நம்பியிருந்த நிலைமை மாறி சொந்தமாக இனிமேல் சம்பாதிப்பீர்கள். மனஅழுத்தத்திலிருந்தும் விடுபடுவீர்கள். முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு வேலை விஷயத்தில் நல்ல தகவல்கள் உண்டு. தன்னுடைய திறமையை முதலீடாக வைத்து சம்பாதிப்பவர்களுக்கு நல்ல பணவரவு இருக்கும்.

தனுசு:

ஐந்து, ஒன்பதுக்குடைய யோகாதிபதிகள் சூரியனும், செவ்வாயும் ஆறு பனிரெண்டில் மறைந்து பார்த்துக் கொண்டாலும் இவர்கள் இருவருடனும் சனி சம்பந்தப்பட்டதால் கைக்கு கிடைத்தது வாய்க்கு எட்டாத மாதமாக வைகாசி மாதம் உங்களுக்கு இருக்கும். அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.

இளைய பருவத்தினர் எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற வீண்பழி, கைப்பொருள் திருட்டுப் போகுதல் போன்ற பலன்கள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். அலுவலகத்தில் டிரான்ஸ்பர், பதவிஉயர்வுடன் கூடிய இடமாற்றம் போன்றவைகள் இருக்கலாம். சிலருக்கு கம்பெனி சார்பில் வெளிநாடு பயணங்கள் இருக்கும். அதனால் நன்மைகளும் இருக்கும். இளைய பருவத்தினருக்கு இண்டர்வியூ அழைப்பிற்கான கடிதங்கள் வரும். ஆனால் வேலைதான் இழுத்தடிக்கும்.

மகரம்:

எட்டுக்குடையவன் ஐந்தில் அமர்ந்து எட்டாமிடத்தில் குருவும் ராகுவும் இணைந்திருப்பது நல்ல நிலையல்ல என்றாலும் இன்னும் சிலவாரங்களில் குருபகவான் ஒன்பதாமிடத்திற்கு மாறுவது உங்களின் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்கும் என்பதால் வைகாசி மாதம் பெரிய அளவில் கவலைப்படத் தேவையில்லாத மாதமாக இருக்கும். தாயார் வழியில் நன்மைகளும், அம்மாவின் ஆசிர்வாதங்களும் இந்த மாதம் உண்டு. குறிப்பிட்ட சிலருக்கு தாய்வழி சீதனம் போன்று ஏதேனும் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது.

அறிவால் எதையும் சாதிப்பீர்கள். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து பணம் கிடைப்பதில் தடைகள் இருக்கலாம். குறிப்பிட்ட சிலருக்கு கடன் வாங்க வேண்டிய நெருக்கடிகள் இருக்கும். கடன்காரர்களுக்கு சொல்லும் தேதியில் பணம் தரமுடியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த மாதத்தில் செலவுகளும், அலைச்சல்களும் வீண் தொந்தரவுகளும் இருக்கும். யோகாதிபதிகள் வலுப்பெறுவதால் பிரச்னைகளை சமாளிக்கும் தைரியமும் உண்டாகும்.

கும்பம்:

ராசிநாதன் சனிபகவான் வலுப்பெற்ற சுக்கிரனின் பார்வையைப் பெறுவதும், குருபகவான் ராசியைப் பார்ப்பதும் யோகநிலை என்பதால் வைகாசி மாதம் கும்பராசிக்கு எல்லாவிதமான நன்மைகளையும் தரும் மாதமாக இருக்கும். அதே நேரத்தில் சுக்கிரன் நான்காமிடத்தில் ஆட்சிநிலை பெறுவதால் வீடு, வாகனம், தாயார் போன்ற அமைப்புகளில் நல்ல மாற்றங்கள் வரும் மாதமாகவும் இருக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள்.

இளைய பருவத்தினருக்கு இந்த மாதம் முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். அலுவலகத்திலோ அல்லது ஏதேனும் ஒரு அமைப்பிலோ தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு துறைரீதியான நெருக்கடிகள் இருக்கும். ராசிநாதன் பாபகிரக இணைவில் இருப்பதால் நீங்கள் செய்வது தவறாகவே இருந்தாலும் இப்போது அதை ஒத்துக்கொள்ள மாட்டீர்கள். உங்களின் பிடிவாத குணம் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் உங்களுக்கு கெட்டபெயர் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பார்கள். பெண்கள் விஷயத்தில் செலவு இருக்கும்.

மீனம்:

ஆகஸ்டு மாதம் நடைபெறவிருக்கும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு மீனராசிக்கு கிடைக்க இருக்கும் அளவில்லா நன்மைகளுக்கு அச்சாரம் போடும் மாதமாக வைகாசி மாதம் இருக்கும். இதுவரை மீனராசிக்கு இருந்து வந்த அனைத்து இடையூறுகளும் இந்த மாதத்துடன் விலகத் துவங்கும் என்பதால் இனிமேல் மீனத்திற்கு கவலை எதுவும் இல்லை. முதல் திருமணம் கசப்பில் முடிந்து விவாகரத்தானவர்களுக்கு இப்போது இரண்டாவது வாழ்க்கை தொடக்கத்திற்கான சம்பவங்கள் நடக்கும்.

கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். தாயார் விஷயத்தில் சொல்லிக் கொள்ளும்படியான நன்மைகள் இருக்கும். தாயார்வழி உறவினர்கள் உதவுவார்கள். உயர்கல்வி கற்க விரும்பும் சிலருக்கு அதற்கான ஆரம்பங்கள் இருக்கும். இதுவரை சொந்தவீடு அமையாதவர்கள் இப்போது செய்யும் முயற்சிகள் பலனளிக்கும். சிலருக்கு ஆன்மீக சம்பந்தப்பட்ட பயணங்களும். சிலருக்கு வேற்றுமொழி கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் உண்டு.

No comments :

Post a Comment